நிர்பயா வழக்கில் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளி அளித்த கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு நடு இரவில் பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கி இருந்தது. இந்தப் பாலியல் வன்கொடுமையால் பலத்த காயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் விசாரிக்கப்பட்ட பிறகு, பவன் குப்தா, முகேஷ் சிங், வினேய் சர்மா, ராம் சிங், அக்ஷய் தாக்கூர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து குற்றவாளிகளுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 2017ஆம் ஆண்டு இந்தக் குற்றவாளிகளின் தண்டனையை மீண்டும் உறுதி செய்தது.
இவ்வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான ராம் சிங் சிறைச்சாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மற்றவர்கள் தங்களின் தூக்கு தண்டனையை எதிர்த்து மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து அவர்களின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. அதனால் எந்த நேரத்திலும், இவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்படலாம்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், நிர்பயா வழக்கில் மரண தண்டனை குற்றவாளி வினய் ஷர்மாவின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரிக்க வேண்டும் என கூறியுள்ளது.