மில்கா சிங்கிற்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு; ஒருநாள் விடுமுறை: பஞ்சாப் முதல்வர்

மில்கா சிங்கிற்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு; ஒருநாள் விடுமுறை: பஞ்சாப் முதல்வர்
மில்கா சிங்கிற்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு; ஒருநாள் விடுமுறை: பஞ்சாப் முதல்வர்

புகழ்பெற்ற தடகள வீரர் மில்கா சிங்குக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்த பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் உத்திரவிட்டார். அவரின் நினைவாக ஒரு நாள் விடுமுறையும் அறிவித்தார்.

மில்கா சிங்கின் இறுதி சடங்குகள் இன்று மாலை ஹரியானாவில் நடத்தப்படும் என்றும், அவர் பஞ்சாப் மற்றும் இந்தியாவின் பெருமைமிக்க அடையாளம் என்றும் பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் தெரிவித்தார்

பறக்கும் சீக்கியர் என அழைக்கப்படும் முன்னாள் இந்திய தடகள வீரர் மில்கா சிங் (91) நேற்று இரவு காலமானார். கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மில்கா சிங், பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருந்ததால் குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த மாத தொடக்கத்தில் மில்கா சிங்குக்கு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சண்டிகரில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மில்கா சிங் நேற்று இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார் என அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நிர்மல் கவுர் இந்திய மகளிர் வாலிபால் அணியின் கேப்டனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மில்கா சிங் இந்தியா சார்பில் 1956, 1960, 1964 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர்.

அதில் 1960 ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் மயிரிழையில் ஒலிம்பிக் பதக்கத்தை நழுவவிட்டு, 400 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் 4 ஆவது இடம் பிடித்தார். "இந்தியாவின் பறக்கும் மனிதர்" என புகழப்படும் மில்கா சிங்கின் மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் சிங் ஆகியோர் இரங்கலை தெரிவித்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com