இந்திய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவர் பலி
காஷ்மீர் பட்காம் பகுதியில் ‘Mi-17’ ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் நேற்று பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய ராணுவம் பயங்கரவாதிகள் முகாம்களின் மீது குண்டு வீசியது. இதில் பலர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் நிலவி வருகிறது.
இந்தியா தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தானும் பதில் தாக்குதலுக்கு முயற்சி செய்யலாம் என்பதால் முப்படைகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே நேற்று குஜராத் பகுதியில் பறந்த ஆளில்லா உளவு விமானத்தை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். இந்திய விமானப்படையின் பாதுகாப்பு விமானங்கள் முழு நேர ரோந்து பணியில் இருந்து வருகின்றன.
இந்நிலையில் இன்று காஷ்மீரின் ஸ்ரீநகர் விமானநிலையம் அருகே பட்காம் பகுதியில் ‘Mi-17’ ரக இந்திய விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 2 விமானிகளும் உயிரிழந்ததாகவும், விபத்து நடந்த இடத்தில் இருவரின் உடல்கள் கைப்பற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமான விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையே பாதுகாப்பு காரணங்களுக்காக ராணுவ விமானங்களை தவிர மற்ற எந்த விமானங்களும் ஜம்மு- காஷ்மீர் வான் பகுதியில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.