ஷீலா தீட்சித்தை குறைகூறிய பி.சி.சாக்கோ.. - காங்கிரஸுக்குள் எழுந்த கடும் எதிர்ப்பு

ஷீலா தீட்சித்தை குறைகூறிய பி.சி.சாக்கோ.. - காங்கிரஸுக்குள் எழுந்த கடும் எதிர்ப்பு
ஷீலா தீட்சித்தை குறைகூறிய பி.சி.சாக்கோ.. - காங்கிரஸுக்குள் எழுந்த கடும் எதிர்ப்பு

நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட்டை இழந்தது. 2013 வரை ஆட்சியில் இருந்த அந்த கட்சி ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாமல் போனது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு அந்த அதிர்ச்சி இருந்ததா என தெரியவில்லை. ஏனெனில் அக்கட்சியின் தலைவர்கள் பலரும் சொல்லும் கருத்துகள், தோல்வி குறித்த கவலையை வெளிப்படுத்தவில்லை.

காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியை பெற்ற போதிலும் காங்கிரஸின் சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் ஆம் ஆத்மிக்கு வாழ்த்து மழை பொழிந்தனர். இந்நிலையில் டெல்லி மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பி.சி.சாக்கோ தோல்வி குறித்து பேசியுள்ளார். அதில் “ஷீலா தீட்சித் முதல்வராக இருந்த 2013-ம் ஆண்டே காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி குறைய ஆரம்பித்தது. அதனை புதிய கட்சியான ஆம் ஆத்மி பெற்றது. சென்ற வாக்குகளை எங்களால் திரும்பிப் பெற இயலவில்லை. அவை இன்னும் ஆம் ஆத்மி கட்சிக்கே சென்று கொண்டிருக்கிறது” என கூறினார்.

தோல்விக்கு ஷீலா தீட்சித்தை மறைமுகமாக பி.சி.சாக்கோ பொறுப்பாக்குகிறார் என்ற கோணத்தில் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மிலிந்த் தியோரா “டெல்லியின் சிறந்த முதல்வர்களில் ஷீலா தீட்சித் ஒருவர், அவர் இறந்த பின்னும் இகழப்படுவது வேதனையாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்காக வாழ்வை அர்ப்பணித்தவருக்கு இந்நிலையா ? என சாடியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேரா, ஒரு படி மேலே சென்று புள்ளி விபரங்களை கொண்டு பி.சி.சாக்கோவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, :2013-ல் 24.55 ஆக இருந்த காங்கிரஸின் வாக்கு சதவீதம், ஷீலா தீட்சித் பங்கேற்காத 2015 தேர்தலில் 9 சதவீதமாக குறைந்தது. மீண்டும் அவர் தீவிரமாக செயல்பட தொடங்க 2019-ல் 22 சதவீதமாக உயர்ந்தது “ என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com