மக்களே ஜாக்கிரதை.. அடுத்த 3 மாதம் சுட்டெரிக்கப்போகும் வெயில்!
இந்திய வானிலை ஆய்வு மையம் 2026 கோடைக்காலத்திற்கான வெப்ப அலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. வட தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் வெப்பம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் முன்னெச்சரிக்கையாக மதிய நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கவும், நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உலகளவில் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் ஆண்டுக்கு ஆண்டு வெயில் குறிப்பிட்ட அளவை விட அதிகரித்து வருவதால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
தற்போது, இந்திய வானிலை ஆய்வு மையம் 2026-ம் ஆண்டின் மார்ச் முதல் மே வரையிலான கோடை காலத்திற்கான வெப்ப அலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வெப்ப அலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
எங்கெல்லாம் வெப்பம் அதிகமாக இருக்கும்?
குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா, சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா மற்றும் வட கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மிகக் கடுமையான வெப்ப அலை நிலவும் என வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கிழக்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் சாதாரண நாட்களை விட 10 முதல் 15 நாட்கள் கூடுதலாக வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாகவும் கோடை வெப்பம் தீவிரமடையும் என்பதால், மக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, மதிய நேரங்களில் நேரடியாக வெயிலில் செல்வதைத் தவிர்ப்பதும், நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வதும் அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

