மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் - வாட்டாள் நாகராஜ் மிரட்டல்
செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கர்நாடகா - மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து சேவையில் ஏற்பட்ட தகராறு மார்ச் 22ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடைபெறுவதாக கன்னட அமைப்புக்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில், கன்னட சலுவளி வாட்டள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஒசூர் அடுத்த அத்திப்பள்ளி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தமிழகத்திற்குள் நுழைய முயன்ற அவர்களை ஆனேக்கல் போலீசார் கைது செய்தனர். முன்னதாக செய்தியாளரிடம் பேசிய வாட்டாள் நாகராஜ்... மகாராஷ்டிரா மாநிலத்தை மட்டுமல்ல தமிழக அரசை கண்டித்தும் நாங்கள் பந்தில் ஈடுபட உள்ளோம். மேகதாது அணையை கட்ட எவ்வித ஆட்சேபனையும் இல்லை என ஒரு மாதத்திற்குள்ளாக தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.. இல்லை என்றால் முதல் போராட்டமாக கர்நாடக மாநிலத்தில் தமிழ் சினிமாக்களை ஓட விட மாட்டோம்.
மும்மொழி கல்விக் கொள்கைக்கு எதிராக தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய "கூட்டு நடவடிக்கை குழு" என்பதை நாங்கள் கண்டிக்கிறோம். தொகுதி மறு சீரமைப்பில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது. அப்படி குறைந்தால் மத்திய அரசிற்கு எதிராக நாங்களும் போராடுவோம். தமிழகத்தில் நடக்கும் இந்தி போராட்டத்தை விட, கர்நாடக மாநிலத்தில் இந்தி மொழிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகிறோம்.. இந்தி மொழியை அனுமதிக்க மாட்டோம்.
காவிரி நீர், கடலில் கலப்பதை தடுக்கவே நாங்கள் மேகதாது அணையை கட்டுகிறோம். காவிரி, மேகதாது, மாதாயி உள்ளிட்ட அணைகளுக்காக தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை கண்டித்து மாநிலம் தழுவிய பந்த் நடக்கும் என்று வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.