பெங்களூரில் நடைபெறவிருந்த எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் ரத்து - இதுதான் காரணமா?

பெங்களூரில் நடைபெறவிருந்த எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர்கள்
எதிர்க்கட்சி தலைவர்கள் கோப்பு படம்

பாஜகவிற்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணி பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார், எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இணைந்து ஜூன் 23 பாட்னாவில் மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டினார். இதில், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, ஆம் ஆத்மி எனப் பல முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் பாஜகவிற்கு எதிராக சேர்ந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்தக் கூட்டத்தை கர்நாடகாவின் பெங்களூருவில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

எதிர்க்கட்சி தலைவர்கள்
எதிர்க்கட்சி தலைவர்கள்

இருப்பினும், மேகதாது பிரச்சனை காரணமாக கர்நாடகா தலைநகர் பெங்களூரில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கு பெற திமுக விரும்பவில்லை. ஆலோசனை கூட்டத்தை வேறு நகரத்திற்கு மாற்றும் படி திமுக கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் பின்னர் நடைபெறும் எனவும் சிம்லா அல்லது ஜெய்ப்பூரில் கூட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்றார். மேகதாது பிரச்சனை இழுபறியாக உள்ள நிலையில், கர்நாடக தலைநகரில் கூட்டம் நடைபெற்றால் அதில் பங்கேற்பது சரியாக இருக்காது என்று திமுக தலைமை கருதுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com