கணவரின் கொலையில் சாட்சியாக இருந்த மனைவி, மகன் கொலை
முன்விரோதம் காரணமாக மீரட்டில் தாய் மற்றும் மகனை 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்தவர் நரேந்திரா. இவர் 2016ஆம் ஆண்டு முன் விரோதம் காரணமாக, படுகொலை செய்யப்பட்டார். இவரது மறைவை அடுத்து இவரது மனைவி கவுர் மகன் பல்வந்தருடன் வசித்து வந்தார். நரேந்திரா கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்கு நடைப்பெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் ஆஜராகி கவுரும் அவர் மகனும் சாட்சியளித்தனர். நரேந்திராவின் கொலை சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி இவர்கள் இருவர் மட்டுமே. சாட்சியம் அளித்து விட்டு வீடு திரும்பிய சில மணி நேரத்தில் இவர்கள் இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். மூன்று பேர் கொண்ட கும்பல் இச்சம்பவத்தை நிகழ்த்தியுள்ளது.
முதலில் அவரது மகன் பல்வந்தரை சுட்டுக்கொன்ற அக்கும்பல், பிறகு நிஹ்ததர் கவுரின் வீட்டுக்கு வந்தனர். வெளியில் அமர்ந்திருந்த கவுரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். மேலும் அவர்கள் அப்பகுதியில் இருந்த பொதுமக்களையும் மிரட்டியுள்ளனர். இந்தக்காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து பொதுமக்கள் யாரும் எதுவும் தெரிவிக்கவில்லை. காவல்துறையினர் விசாரணைக்கு வந்தபோதும் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என போலீசார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.