விவசாயிகளை அணுகுவது எப்படி? - மீனாட்சி சரயோகி என்னும் முன்னுதாரண ஆளுமை!

விவசாயிகளை அணுகுவது எப்படி? - மீனாட்சி சரயோகி என்னும் முன்னுதாரண ஆளுமை!

விவசாயிகளை அணுகுவது எப்படி? - மீனாட்சி சரயோகி என்னும் முன்னுதாரண ஆளுமை!
Published on

புதிய வேளாண் சட்டங்களையொட்டி விவாதம் வலுத்துள்ள நிலையில், விவசாயிகளை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருந்த மீனாட்சி சரயோகியை நினைவுகூரத் தொடங்கியுள்ளனர், மேற்கு வங்க கரும்பு விவசாயிகள்.

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் 1944-ம் ஆண்டு சாதாரண குடும்பத்தில் பிறந்த மீனாட்சி, கல்லூரிப் படைப்பை முடித்து தனது 20 வயதில் கொல்கத்தாவுக்கு இடம்பெயர்ந்தார். தொழிலதிபர் கமல் நயா சரயோகியை திருமணம் செய்துகொண்டார். கணவர் சரயோகியின் பல தொழில்களில் ஒன்றுதான் சர்க்கரை ஆலை. மேற்கு வங்க மாநிலம், பல்ராம்பூரில் அவர்களது சர்க்கரை ஆலை இருந்தது. திருமணமாகி 13 வருடங்கள் வரை வீட்டை மட்டும் கவனித்து வந்தார் மீனாட்சி. அவர் வெளியில் காலம் என்பது கரும்பு அரவைப் பருவமாகத்தான் இருந்தது.

கரும்பு அரவை காலத்தில் மட்டும் வேடிக்கை பார்க்க குழந்தைகள், கணவருடன் இணைந்து பல்ராம்பூர் செல்வது மீனாட்சிக்கும் வெளியுலகுக்குமான அதிகபட்ச தொடர்பு. இதற்கிடையே, 1982-ம் ஆண்டு அவர் மனதில் திடீரென ஒரு யோசனை தோன்றியது. கணவர் தனது தொழிலை கொல்கத்தாவுக்கு மாற்றியபோது, சுகர் இண்டஸ்ட்ரியில் தானும் ஈடுபட விரும்புவதாகக் கணவரிடம் மீனாட்சி தெரிவித்தார். ஆச்சரியமடைந்த கணவர், மனைவியைத் தட்டிக் கொடுத்து ஊக்குவித்தார்.

தொழில் பார்க்கும்போது குழந்தைகளை கவனிக்க முடியாது என்று அறிந்த மீனாட்சி, தனது இரு குழந்தைகளையும் தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். பல்ராம்பூரில் தங்கிய மீனாட்சி, தொழிலை நேரடியாகக் கவனிக்க ஆரம்பித்தார். சாதாரணமாக ஆரம்பித்த மீனாட்சியின் செயல்பாடுகள் மெள்ள மெள்ள விஸ்வரூபம் எடுத்து மிகப் பெரிய ஆலையாக அவருடைய சர்க்கரை ஆலை மாறியது. அவரது தீவிர முயற்சியின் பலனாக ஒரு கட்டத்தில் சர்க்கரை ஆலைத் தொழிலில் இந்தியாவிலேயே 2-வது இடத்தைப் பிடித்து மீனாட்சி சாதனையும் படைத்தார்.

தனது கடும் முயற்சிகளால், மேலும் தொடர்ந்து சாதனை படைத்து வந்த மீனாட்சி, ஒரு நாளைக்கு 800 டன் அரவை என்பதை தினசரி 76,500 டன் என்ற அளவுக்கு உயர்த்தினார். இந்தியாவின் 100 சதவிகிதம் நம்பகத்தன்மையுள்ள சர்க்கரை ஆலை என்ற பெரையும் பல்ராம்பூர் சர்க்கரை ஆலை பெற சரயோகிதான் முக்கியக் காரணம். இந்த நிறுவனம் கடந்த 2019-20 காலகட்டத்தில் ரூ.609 கோடி லாபம் சம்பாதித்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளிடமிருந்து கிட்டத்தட்ட ரூ.50,000 கோடிக்கு மேல் பரிவர்த்தனை செய்துள்ளது. கரும்பு கொள்முதலுக்கு உடனடியாகப் பணத்தைக் கொடுத்து விடுவது இந்த நிறுவனத்தின் முக்கிய அம்சம்.

மேற்கு வங்க மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியாக இருந்தது பல்ராம்பூரை வளம் மிக்க பகுதியாக உருவாக்க முக்கிய காரணம் மீனாட்சி என்றால் மிகையல்ல. அவர் களப்பணியினால், பெரிய தொழிற்சாலைகள், வேலை வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் இடமாக பல்ராம்பூரை மாற்றினார். இது மட்டுமின்றி விவசாயிகளுக்கு பக்க பலமாக இருந்து, விவசாயிகளுக்கு கல்வி அறிவு, உரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஆரம்பத்தில் சரியான விலை கிடைக்காமல் கரும்பு பயிரிடுவதற்கு விவசாயிகள் தயங்கினர்.

அப்போது மீனாட்சி வீடு வீடாகப் போய் அவர்களைச் சமாதானப்படுத்தினார். கரும்பு பயிரிடுமாறும் உரிய விலை தருவதாகவும் ஊக்கம் கொடுத்தார். நீங்கள் வளர்க்கும் கரும்பு ஒன்றுகூட வீணாகாது. நான் வாங்கிக் கொள்கிறேன் என்று உறுதியளித்தார். அன்று கொடுத்த அந்த வாக்குறுதியைப் பல்ராம்பூர் சின்னி சர்க்கரை ஆலை நிறுவனம் இன்று வரை கடைப்பிடித்து வருகிறது என்று அப்பகுதி விவசாயிகள் பெருமித்துடன் கூறுகிறார்கள்.

விவசாயிகளை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு உதாரணம் காட்டிச் சென்றவர் இந்த மீனாட்சி. விவசாயிகளின் பயிர்களை கொள்முதல் செய்யும்போதே அவர்கள் கையில் பயிருக்கான பணமும் இருக்கும். ``விவசாயிகளுக்கு வேறு தொழில் தெரியாது. விவசாயமே அவர்களின் பிரதானம். அப்படி இருக்கும்போது அவர்களின் உழைப்பை வீணாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது" - இது மீனாட்சி ஒரு பேட்டியில் உதிர்த்த வார்த்தைகள்.

இன்று விவசாயிகள் தெருவில் தங்களின் கோரிக்கைகளுக்காக இரவும், பகலும், குளிரிலும், மழையிலும் போராடி கொண்டிருக்கிறார்கள். டெல்லியில் 24 நாள்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் இந்தக் காலகட்டத்தில் இப்படிப்பட்ட மீனாட்சியை நினைவுகூர வேண்டியது அவசியம். நாட்டுக்கு மக்களின் உணவுக்கு படியளக்கும் விவசாயிகளை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு மீனாட்சியே சாட்சி. மீனாட்சி உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார்.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com