சட்டவிரோத குடியேற்றம்.. அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்!
அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளால், இந்த ஆண்டில் இதுவரை 1076 இந்தியர்கள் அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதிபடுத்தி உள்ளது.
சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இரு நாடுகளும் உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்த வெளியுறவு அமைச்சகம், இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 1,076 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும், 2025-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3,567-ஆக இருந்ததாகவும் கூறியிருக்கிறது.
கடந்த ஆண்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உலகம் முழுவதிலுமிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. 2025-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அரசு அளித்த புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்தது.
நாடு கடத்துதல், குடியேற்றம் மற்றும் இடப்பெயர்வு தொடர்பான விவகாரங்களில் அமெரிக்காவும் இந்தியாவும் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், சட்டப்பூர்வமான குடியேற்றத்தைப் பாதிக்காத வகையில் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க அவர்கள் பணியாற்றி வருவதாகவும் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

