‘ராம்ப் வாக்’ பயிற்சியின் போது நெஞ்சு வலி - இளம்பெண் பரிதாப உயிரிழப்பு
ராம்ப் வாக் பயிற்சியின் போது இளம் பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
பெங்களூருவின் பீன்யா பகுதியில் ஒரு தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் ஷாலினி(21) என்ற பெண் முதலாம் ஆண்டு எம்பிஏ பட்டப்படிப்பு பயின்று வருகிறார். இந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ‘ஃபிரசர்ஸ்’ நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக பெண்கள் சிலர் ராம்ப் வாக் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பயிற்சியின் போது ஷாலினி மயக்கம் அடைந்து உள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர்கள் ஷாலினி இறந்தப் பிறகு தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, கால்வதுறை துணை ஆணையர் சசிக்குமார், “கல்லூரியின் ஃபிரசர்ஸ் நிகழ்ச்சிக்காக ராம்ப் வாக் பயிற்சியில் சில பெண்கள் ஈடுபட்டனர். அப்போது ஷாலினி என்ற பெண் மயங்கி விழுந்து இறந்துள்ளார். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஏனென்றால் இந்தப் பெண்ணை அவரது சக நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது ஷாலினி இறந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.