“யானை சிலைகளுக்கான பணத்தை மாயாவதி டெபாசிட் செய்ய நேரும்?” - நீதிமன்றம்
சிலைகளை நிறுவுவதற்காக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி செலவிட்ட அரசு தொகையை டெபாசிட் செய்ய வேண்டியிருக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சராக பதவி வகித்த, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மாநிலத்தின் பல நகரங்களில் உள்ள பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில், அவரது சிலையும், அவரது கட்சியின் சின்னமான யானைகளின் உருவச் சிலைகளும் அமைத்தார்.
இதற்காக பல கோடி ரூபாய் செலவானது. இதை எதிர்த்து, கடந்த 2009 ஆம் ஆண்டு வழக்கறிஞர் ரவிகாந்த், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா அமர்வு முன், இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தன் கட்சி சின்னமான யானை மற்றும் தன் உருவச் சிலைகளை பெருமளவில் நிறுவியதால், மாநில அரசுக்கு பெரியளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் சிலைகளுக்காக மாயாவதி செலவிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டியிருக்கும் எனவும் கருத்து தெரிவித்தார். மேலும், விசாரணையை ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.