’’எனது இறப்புச் சான்றிதழை காணவில்லை’’ - இணையத்தை தெறிக்கவிட்ட விசித்திர விளம்பரம்!!
உலகம் முழுவதும் இணையங்களில் விசித்திரமான தகவல்களுக்கு பஞ்சமே இல்லை எனலாம். சமையல் டிப்ஸ், விலங்குகளின் க்யூட் சேட்டைகள், வித்தியாசமான திருமணங்கள் என தினசரி ஏதாவது ஒன்று வந்து நம்மை பிரம்மிப்படைய வைக்கும் அல்லது சிரிப்பூட்டும். அதுபோல ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அது ஒரு செய்தித்தாள் விளம்பரம்.
ஐபிஎஸ் அதிகாரி ரூபின் ஷர்மா விளம்பரம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஒரு நபர் தனது இறப்புச் சான்றிதழை தொலைத்துவிட்டதாக விளம்பரம் ஒன்றை கொடுத்துள்ளார். ஆம், ஒருவர் இறந்துவிட்டதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ் தான். ஒரு நபர் இறந்தபிறகு மட்டுமே கிடைக்கக்கூடியது. ‘’07/09/2022 எனத் தேதியிட்ட, நான் எனது இறப்புச் சான்றிதழை லும்டிங் பஜாரில் (அசாமில்) தொலைத்துவிட்டேன்'’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த விளம்பரத்தில் பதிவு மற்றும் இழந்த சான்றிதழின் வரிசை எண் ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
’’இந்தியாவில் மட்டும்தான் இது நிகழும்’’ என ஷர்மா தனது போஸ்ட்டில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு பகிரப்பட்டதிலிருந்து சமூக ஊடங்களில் நெட்டிசன்கள் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அந்த நபர் சொர்க்கத்திலிருந்து உதவி கேட்கிறார் என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். சிலர் எங்கே தொலைத்தாரோ அவர் அங்கேதான் சென்று தேடவேண்டும் என நகைச்சுவையுடன் கமெண்ட் செய்துள்ளனர். ஒருவர், அது கிடைத்தால் எங்கு கொடுக்கவேண்டும்? சொர்க்கத்திலா? அல்லது நரகத்திலா? என்று கேட்டுள்ளார். சீக்கிரம் பதிலளியுங்கள். இல்லாவிட்டால் பேய்க்கு கோபம் வந்துவிடும் என ஒருவர் கிண்டலடித்துள்ளார்.