மத்திய அமைச்சராக இருக்கும் மனோஜ் சின்ஹா, உத்தரப்பிரதேச முதலமைச்சராக அதிக வாய்ப்பிருப்பதாக பாரதிய ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டப்பேரவை தேர்தலில் கோவா, மணிப்பூரில் இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைத்துள்ள நிலையில், பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியமைக்காமல் இருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக, அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து நாளை புதிய அரசு பதவியேற்கிறது. முதலமைச்சராக, மத்திய ரயில்வே மற்றும் தொலைத் தொடர்பு இணை அமைச்சராக இருக்கும் மனோஜ் சின்ஹா தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.
மேலும், பா.ஜ.க. மாநிலத் தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரின் பெயர்களும், முதல்வர் போட்டியில் இருப்பதாக, பா.ஜ.க. வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அண்மையில் நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக கூட்டணி மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 325 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.