(கோப்பு புகைப்படம்)
கர்நாடக மாநிலம் மங்களூரில் சமூகவலைத்தளம் மூலம் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
மங்களூர் மாவட்டம் உடுப்பியின் ஷிர்வா பகுதியில் வசித்து வருபவர் சலீம். இவருக்கும் ஸவப்னாஸ் என்பவருக்கும் 2010 இல் திருமணமானது. இவர்களுக்கு பெண் குழந்தையும் இருக்கிறது. சலீமும் குடும்பத்துடன் சவுதி அரேபியாவில் வசித்து வந்தார். கடந்த ஜூலை மாதம் மனைவியையும் குழந்தையையும் சவுதி அரேபியாவிலேயே விட்டுவிட்டு சலீம் சொந்த ஊருக்கு திரும்பினார்.
இந்தியா வந்ததும் சமூகவலைத்தளத்தில் தன் மனைவிக்கு முத்தலாக் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய சமூக வலைத்தள கணக்குகளில் வேறு ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களை சலீம் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து இமெயில் மூலம் சவுதியிலிருந்து மங்களூர் மாவட்ட காவல்துறைக்கு ஸவப்னாஸ் புகாரளித்துள்ளார். இதனையடுத்து சலீம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.