ராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கிளம்பிய டெலிவரி பாய் : இது ஸ்விக்கி கலாட்டா!!
பெங்களூரு வாடிக்கையாளர் ஒருவருக்கு உணவு டெலிவரி செய்ய ராஜஸ்தானில் இருந்து ஸ்விக்கி டெலிவரி பாய் புறப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவியுள்ள நவீன நாகரிகமாகவும், வியாபாரமாகவும் இருப்பது ஆன்லைன் வர்த்தகம். இதில் தேவையான பொருட்களை ஆர்டர் செய்தால் வீட்டிற்கு வந்து கொடுத்துவிடுவார்கள் என்பதால் இந்த வர்த்தகம் மக்களிடம் வேகமாக சென்று சேர்ந்துள்ளது.
குறிப்பாக இந்திய வர்த்தக்கத்தில் சில ஆன்லைன் நிறுவனங்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. இதுதவிர பல்வேறு ஆன்லைன் வர்த்தக முறைகளும் பெருகியுள்ளன. அதன்படி, உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களான ஸ்விக்கி, சோமேடோ ஆகியவை வியாபாரத்தில் வளர்ச்சி அடைந்துள்ளன. ஆனால் இவை அவ்வப்போது பல சர்ச்சைகளிலும் சிக்குகின்றன. உணவில் பூச்சி, வாடிக்கையாளர் உணவை டெலிவரி பாய் உண்பது, தரமற்ற உணவு எனப் பல சர்ச்சைகள் நாள்தோறும் வந்துகொண்டே இருக்கின்றனர்.
இந்நிலையில் ஒரு புதிய நகைச்சுவை கலாட்டா ஸ்விக்கியில் நிகழ்ந்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த பார்கவ் ராஜன் என்பவர், தனக்கு அருகாமையில் உள்ள உணவகம் ஒன்றில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அதே பெயர் கொண்ட ராஜஸ்தான் ஓட்டல் ஒன்றில் பதிவாகியுள்ளது. இதைக்கண்டு குழப்பமடைந்த ராஜன், சற்று நேரத்தில் ஆச்சர்யமும் அடைந்தார். ஏனென்றால் அவர் ஆர்டர் செய்த உணவை டெலிவரி செய்ய, ராஜஸ்தானில் இருந்து ஸ்விக்கி டெலிவரி நபர் பிரபாகரன் புறப்பட்டார்.
இதனால் வியந்துபோன ராஜன், ஸ்விக்கி அப்பில் காட்டிய வரைபடத்தை, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “அட ஸ்விக்கி. என்னமா வண்டி ஓட்டுறீங்க” என நகைச்சுவையாக தெரிவித்தார். இந்தப் புகைப்படம் சற்று நேரத்தில் வைரலானது. இதற்கு விளக்கமளித்துள்ள ஸ்விக்கி, “இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது. இதுதொடர்பாக விசாரித்து சீரிய நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் குறைகளை குறிப்பிட்டு காட்டியதற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளது.