மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி, இஸ்லாமிய சிறுவன் அடித்துக்கொலை

மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி, இஸ்லாமிய சிறுவன் அடித்துக்கொலை
மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி, இஸ்லாமிய சிறுவன் அடித்துக்கொலை

மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட 16 வயது இஸ்லாமிய சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரம்ஜான் நெருங்குவதையொட்டி ஹரியானா மாநிலம் பல்லாப்காரை சேர்ந்த ஜூனாத், ஹாசிப், ஷாகிர் மற்றும் மோசின் என்ற 4 இஸ்லாமிய சிறுவர்கள் டெல்லியில் பொருட்கள் வாங்கி விட்டு தங்கள் கிராமத்திற்கு ரயிலில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் அவர்களை மதத்தின் பெயரால் இழிவுபடுத்திப் பேசியுள்ளனர். பிறகு மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி, திடீரென அவர்களை, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கத் தொடங்கினர். அதில் ஒருவர் தாக்குதலை தாங்க முடியாமல் ரயிலை நிறுத்தும் சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார். ஆனால் ரயில் நிற்கவில்லை. கடைசியாக டெல்லியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அசவதி ரயில் நிலையம் அருகே அவர்கள் நால்வரையும் ரயிலில் இருந்து கீழே தள்ளியது அந்தக்கும்பல்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜூனாத் என்ற இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் ஹரியானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவரின் சகோதரரான ஹாசிப், மதத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் பேசி எங்களை தாக்கினர் என்று காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி தாக்கினார்கள் என்பதை காவல் நிலைய வழக்கு பதிவின் போது கூறவில்லை என்று ஹாசிப் கூறினார்.

காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ரயிலில் இருக்கைக்காக நடந்த வாக்குவாதம் தாக்குதலில் முடிந்ததாக கூறினார். மேலும் ரயில்வே காவல்துறையினர் இந்த சம்பவத்தில் தலையிட மறுத்துவிட்டதாகவும் ஹாசிப் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடந்த ரயில் பெட்டி முழுவதும் ரத்த வெள்ளமாகக் காட்சியளிப்பதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com