உடல் பருமனாக இருந்த மனைவியை மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபா மாவட்டம் மேக்நகர் பகுதியை சேர்ந்தவர் சல்மா பேனோ. இவருக்கும் ஆரிப் என்பருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு ஆணும், பெண்ணும் குழந்தைகளாக உள்ளனர். திருமணம், குழந்தை பிறப்புக்கு பின் சல்மா பேனோவின் உடல் எடை கூடியிருக்கிறது. இதனால் பருமனாக மாறியிருக்கிறார். சல்மான பேனோ குண்டாக மாறியதால் அவரது கணவருக்கு அது பிடிக்காமல் போயிருக்கிறது. அவரின் உடல் எடையை சொல்லிச் சொல்லி அடிக்கடி சல்மா பேனோவை துன்புறுத்தியிருக்கிறார் ஆரிப். அதுமட்டுமில்லாமல் சல்மாவின் மாமியாரும் உடல் எடையை வைத்து சல்மாவை இழிவாக பேசியிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் சல்மா பிடிக்காமல் போக, மூன்று முறை தலாக் கூறி விவாகரத்திற்கு முயன்றிருக்கிறார் ஆரிப். அத்துடன் தன்னுடைய குழந்தைகளையும் சல்மாவிடம் இருந்து பிரித்துச் செல்ல முயற்சி செய்திருக்கிறார். இந்த தகவலை சல்மா ஏஎன்ஐ-க்கு தெரிவித்திருக்கிறார். அத்தோடு போலீசிலும் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஆரிப்பின் மீது ஐபிசி 323 மற்றும் 498 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முத்தலாக் முறையை குற்றமாக கருதும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் ஒப்புதல் அளித்திருந்தார். குடியரசுத் தலைவர் ஒப்புதலை அடுத்து அவசர சட்டம் அமலுக்கும் வந்தது. இந்நிலையில் உடல் பருமனாக இருந்த மனைவியை மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.