டெல்லி: தந்தையை காப்பாற்ற ஆக்சிஜன் உதவி கேட்ட பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்த கொடூரம்
(கோப்பு புகைப்படம்)
கொரோனாவால் உயிருக்கு போராடும் தந்தையை காப்பாற்ற ஆக்சிஜன் உதவி கேட்ட பெண்ணை, பாலியல் உறவுக்கு அழைத்த சம்பவம் டெல்லியில் அரங்கேறி உள்ளது.
டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பவ்ரீன் காந்தாரி என்ற பெண், தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சிகரமான பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ''என் நெருங்கிய தோழியின் தந்தை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். அவருக்கு ஆக்சிஜன் கிடைக்கவில்லை. உதவி செய்யும்படி, என் வீட்டருகே வசிக்கும் ஒருவரிடம், தோழியின் இளைய சகோதரி கோரிக்கை விடுத்தார்.
என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள சம்மதித்தால், ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்து தருவதாக அந்த நபர் கூறியுள்ளார். இது போன்ற நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது?' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து அந்த நபரின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கும்படி பலரும் அந்தப் பதிவில் 'கமெண்ட்' செய்து வருகின்றனர்.