நிலக்கரி ஊழல் வழக்கில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனான எம்.பி. அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரின் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதனை மம்தா பானர்ஜி கடுமையாக கண்டித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையில் செப்டம்பர் 6 ஆம் தேதி ஆஜராக அபிஷேக் பானர்ஜிக்கும், அவரது மனைவி ருஜிரா பானர்ஜிக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி ஆஜராகவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாரதிய ஜனதாவை கடுமையாக சாடிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “டெல்லியில் உள்ள பாஜக அரசு அரசியலில் எங்களுடன் நேரடியாக போட்டியிட முடியாததால், அவர்கள் தங்களின் ஏஜென்சிகளைப் பயன்படுத்துகிறார்கள். அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி எங்களுக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்று பாஜக நினைக்கிறது. ஆனால் நாங்கள் வலுவாக வெளிப்படுவோம்" எனத் தெரிவித்தார்
இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிகளான ஷ்யாம் சிங் மற்றும் ஞானவந்த் சிங் ஆகியோருக்கும் விசாரணை நிறுவனம் சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே பிப்ரவரி மாதத்தில், நிலக்கரி ஊழல் வழக்கு தொடர்பாக ருஜிரா நரோலா பானர்ஜி மற்றும் அபிஷேக் பானர்ஜியின் மைத்துனி மேனகா கம்பீர் ஆகியோரை சிபிஐ விசாரித்தது.