மேற்குவங்க மக்கள் சிஏஏ, என்.ஆர்.சியை ஏற்கவில்லை என பிரதமர் மோடியிடம் கூறியதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்க மாநிலம் சென்றுள்ளார். இந்த இரண்டு நாள் பயணத்தின் போது பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்ளவுள்ளார். பயணத்தின் ஒரு பகுதியாக மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை பிரதமர் மோடி சந்தித்தார்.
கொல்கத்தாவில் உள்ள ராஜ்பவனில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. மேற்கு வங்க மாநிலம் முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மம்தா உடனான மோடி சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
பிரதமர் உடனான சந்திப்புக்கு பின்னர் பேசிய மம்தா, “வழக்கமான நடைமுறைக்காக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன். மேற்குவங்க மக்கள் என்.ஆர்.சி மற்றும் சிஏஏவை ஏற்றுக் கொள்ளவில்லை. நீங்கள் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன். மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளதால், டெல்லி வாருங்கள் இதுகுறித்து பேசலாம் என அவர் தெரிவித்தார்.
நாங்கள் சிஏஏ, என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் ஆகியவற்றை எதிர்க்கிறோம். யாரும் நாட்டை விட்டு வெளியேற்றப்படமாட்டார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். யார் மீதும் வன்முறை நிகழ்த்தப்படக் கூடாது. மத்திய அரசு சிஏஏ மற்றும் என்.ஆர்.சியை பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.