ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர்: சோனியா, ராகுலுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர்: சோனியா, ராகுலுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு
ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர்: சோனியா, ராகுலுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பாக பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை மம்தா பானர்ஜி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை மாதம் 25 ஆம் தேதி முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ஜனாதிபதி தேர்தலில், பொது வேட்பாளரை களமிறக்குவது பற்றி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்து பேசி வருகிறார். அந்த வகையில் அவர் ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா ஆகியோரை அழைத்துப் பேசியுள்ளார்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து விவாதித்தனர். அப்போது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் உடனிருந்தார். இந்த சந்திப்பு அரை மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது.

அதைத்தொடர்ந்து மம்தா பானர்ஜி செய்தியாளர்களுடன் பேசும்போது, “ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து பேசினோம். அதே நேரத்தில் வேட்பாளராக யாருடைய பெயரையும் நாங்கள் விவாதிக்கவில்லை. மேலும், நிறைய அரசியல் சமன்பாடுகள் உள்ளன. நாங்கள் மீண்டும் ஒன்றாக அமர்ந்து பேசி, விவாதித்து நாட்டுக்காக உழைக்கக்கூடிய ஒருவரை பொது வேட்பாளராக தேர்வு செய்ய முயற்சி எடுப்போம். அவர் நாட்டுக்காக பணியாற்றக்கூடிய சிறந்த வேட்பாளராக இருப்பார்” என்று மம்தா பானர்ஜி கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com