மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் தங்களது ட்விட்டர் பக்கத்தின் முகப்பு புகைப்படத்தை மாற்றியுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் ஏழாம் கட்டமாக வருகிற 19 ஆம் தேதி 9 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி கொல்கத்தாவில், பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்ற பேரணி நடைபெற்றது. பேரணி கொல்கத்தா பல்கலைக்கழகத்தை தாண்டிய நிலையில், அங்கிருந்த திரிணாமூல் மாணவர் அணியினர், அமித் ஷாவுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி அவருக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இதற்கு பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. எதிர்ப்பு தெரிவித்ததால், கலவரம் மூண்டது. இதனிடையே அமித் ஷா பேரணி மீது, கல்வீசப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில், பல இருச்சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன, சில வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தக் கலவரம் அருகேயிருந்த வித்யாசாகர் கல்லூரிக்கும் பரவியது. அங்கிருந்த வங்கப் புரட்சியாளர் ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதனிடையே வன்முறையால் பாதிக்கப்பட்ட வித்யாசாகர் கல்லூரியை பார்வையிட்ட மம்தா பானர்ஜி, இரு குண்டர்கள் கொல்கத்தாவில் பிரச்னையை ஏற்படுத்துவதாக மோடியையும், அமித் ஷாவையும் மறைமுகமாக விமர்சித்தார்.
இந்நிலையில் மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தின் டிபி புகைப்படத்தை மாற்றியுள்ளனர். ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் சிலை சேதப்படுத்தப்பட்டதையடுத்து, அவரின் புகைப்படத்தையே தங்களது டிபி புகைப்படங்களாக அவர்கள் மாற்றியுள்ளனர்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.யான டெரீக்’ ஓ பிரையன், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம், ஆகியவற்றிலும் வித்யாசாகரின் புகைப்படமே டிபி புகைப்படமாக வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஃபேஸ்புக் பக்கத்தின் டிபி புகைப்படமும் ஈஸ்வர் சந்திர வித்யாசகரின் புகைப்படமே வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.