காந்தி படுகொலை வழக்கு ஆவணங்கள் நாட்டின் பாரம்பரிய சொத்து: நீதிமன்றம்

காந்தி படுகொலை வழக்கு ஆவணங்கள் நாட்டின் பாரம்பரிய சொத்து: நீதிமன்றம்
காந்தி படுகொலை வழக்கு ஆவணங்கள் நாட்டின் பாரம்பரிய சொத்து: நீதிமன்றம்

மகாத்மா காந்தி படுகொலை வழக்கின் ஆவணங்கள் நாட்டின் கலாச்சார பாரம்பரிய சொத்து என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். டில்லியில் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்ற காந்தியை நாதுராம் கோட்சே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி மாவட்ட நீதிமன்றம் 1949-ம் ஆண்டு நவம்பர் 8 அன்று கோட்சேவுக்கு மரண தண்டணை விதித்தது. கோட்சேவுக்கு உதவிய நாராயண் அப்தேவுக்கும் மரணதண்டணை வழங்கப்பட்டது. இருவரும் அம்பாலா சிறையில் 1949 நவம்பர் 15 அன்று இறக்கும் வரை தூக்கிலிடப்பட்டனர்.

மகாத்மா காந்தி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களின் நகல்களை பெறுவதற்கான நடைமுறை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒடிசாவை சேர்ந்த ஹேமந்த் பாண்டா என்பவர் மத்திய தகவல் ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். தான் ஒரு ஆய்வாளர் என்பவதால் கொலை வழக்கின் ஆவணங்களை படிக்க வேண்டியுள்ளது என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். டெல்லி போலீசாரின் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிக்கை, நீதிமன்ற விசாரணைகள், தீர்ப்புகள் உள்ளிட்ட ஆவணங்கள் தேவை என்று மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.

அந்த மனுவை கவனத்தில் கொண்ட மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு, மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தொடர்பான ஆவணங்களை, சாதாரண நபர்களும் எளிதில் பார்வையிடும் வகையில் இணையதளத்தில் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று தேசிய ஆவணக் காப்பகத்துக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு முக்கிய பொறுப்பு உள்ளது என்றும் மனுதாரருக்கு தேவையான ஆவணங்களை நகல்களை வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.  

காந்தி கொலை வழக்கின் ஆவணங்களை மனு தாரருக்கு வழங்க வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த  உத்தரவுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு நீதிபதி விபு பக்ரு முன் இன்று விசாரணைக்கு வந்தது. 

விசாரணையில், “அனைத்து ஆவணங்களை வெளியிடும் அதிகாரம் தமக்கு இல்லை. மத்திய கலாச்சாரத்துறை, தேசிய ஆவண காப்பங்கள் அல்லது டெல்லி போலீசார் வசம் ஆவணங்கள் இருக்கும். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சேகரிக்கும் மற்றும் பாதுகாக்கும் பணியில் கலாச்சாரத்துறை ஈடுபட்டுள்ளது” என்று உள்துறை அமைச்சகம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி கூறுகையில், “ஆவணங்கள் உள்துறை அமைச்சகம் வசம் இல்லையென்றால் அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியும்” என்றார். மேலும், மகாத்மா காந்தி படுகொலை வழக்கின் ஆவணங்கள் நாட்டின் பாரம்பரிய கலாச்சார சொத்து என்று கூறிய நீதிபதி, வழக்கு விசாரணையை பிப்ரவரி 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com