மகாராஷ்டிரா | பாராமதி இடைத்தேர்தல்.. அஜித் பவார் மனைவி போட்டியின்றி வெற்றி?
காங்கிரஸ் கட்சி இடைத்தேர்தலிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, பாராமதி இடைத்தேர்தலில் சுநேத்ரா பவார் போட்டியின்றி வெற்றிபெற உள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வருமாக இருந்த அஜித் பவார், கடந்த ஜன.28ஆம் தேதி காலை விமான விபத்தின்போது உயிரிழந்தார். இந்த விபத்தைத் தொடர்ந்து மறைந்த அஜித் பவாரின் மனைவி சுநேத்ரா பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக, ஜனவரி 31 அன்று சுநேத்ரா பவார் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்மூலம் மாநில வரலாற்றில் இந்தப் பதவியை வகித்த முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். இதையடுத்து, அஜித் பவார் எட்டு முறை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியான பாராமதியிலிருந்து சுனேத்ரா பவார் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் ஆகாஷ் மோரே களமிறக்கப்பட்டார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி இத்தேர்தலிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, பாராமதி இடைத்தேர்தலில் சுநேத்ரா பவார் போட்டியின்றி வெற்றிபெற உள்ளார்.
முன்னதாக, அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே, “பாராமதியில் சுனேத்ராவை போட்டியின்றி வெற்றிபெற காங்கிரஸ் அனுமதிக்காவிட்டால், அது விளைவுகளைச் சந்திக்க நேரிடும். தனது வேட்பாளரை அது திரும்பப் பெறாவிட்டால், அதன் வீழ்ச்சி பாராமதியில் இருந்தே தொடங்கும்" என எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

