மகர விளக்கு பூஜை: சபரிமலை ஐயப்பனுக்கு சார்த்தும் திருவாபரண ஊர்வலம் நாளை புறப்பாடு

மகர விளக்கு பூஜை: சபரிமலை ஐயப்பனுக்கு சார்த்தும் திருவாபரண ஊர்வலம் நாளை புறப்பாடு
மகர விளக்கு பூஜை: சபரிமலை ஐயப்பனுக்கு சார்த்தும் திருவாபரண ஊர்வலம் நாளை புறப்பாடு

மகர விளக்கு பூஜையை ஒட்டி சபரிமலை ஐயப்பனுக்கு சார்த்தி அழகு பார்க்கும் 'திருவாபரண' ஊர்வலம் நாளை (12.01.22) பந்தளத்தில் இருந்து புறப்படுகிறது.

சபரிமலையில் மண்டல பூஜை நிறைவடைந்து மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 30-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் சபரிமலையில் வரும் ஜனவரி 14-ம் தேதி மகர விளக்கு பூஜையும், பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது.

மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, ஐயப்பனுக்கு சார்த்தி அலங்கரித்து அழகுபார்க்கும் தங்க நகைகள் அடங்கிய திருவாபரணங்கள் பத்தனம்திட்டா பந்தளம் அரண்மனையில் இருந்து நாளை எடுத்துச் செல்லப்படுகின்றன. நகைகள் உள்ள இந்த மூன்று பெட்டிகளும் பந்தளம் வலியகோயிக்கல் தர்ம சாஸ்தா கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன்.

பின் மதியம் வானில் கருடன் திருவாபரணத்தை வட்டமிட்ட பின், திருவாபரண பெட்டி ஊர்வலம் மேள தாளங்களுடன் சபரிமலை நோக்கி புறப்படும். மூன்று நாட்கள் பயணிக்கும் இந்த ஊர்வலத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்க வேண்டிய ஆபரணங்கள் மூன்று பெட்டிகளில் தலைச்சுமையாக எடுத்துச் செல்லப்படும்.

அங்கு ஆபரணப்பெட்டியை சபரிமலை தந்திரி பெற்றுக்கொண்டு அதை ஐயப்பனுக்கு சார்த்துவார். மாலை 06.00 மணியில இருந்து 06.30 மணிக்குள் மகா தீபாராதனை நடக்கும்.

பந்தள மகாராஜா ஐயப்பனுக்கு வழங்கிய தங்க ஆபரணங்களை அணிந்தவாறு அரசனாக, பந்தள ராஜகுமாரனாக ஜொலிக்கும் ஐயப்பனுக்கு, தீபாரதனை காட்டும்போது வானில் மகர நட்சத்திரம் தோன்றும். அதே நேரம், பொன்னம்பல மேட்டில் 'மகர ஜோதி' தெரியும். ஐயப்பன் ஜோதியாய் பக்தர்களுக்கு காட்சி தருகிறான் என்பது ஐதீகம்.

மகரஜோதி தரிசனத்தன்று பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் தேவசம்போர்டு சார்பில் ஏற்பாடுகள் துரித கதியில் நடந்து வருகின்றன.

அதோடு மகரஜோதியை பக்தர்கள் தரிசிக்க உள்ள ஹில்டாப், பாண்டித் தாவளம், பருந்து பாறை, புல்லுமேடு, பாஞ்சாலிமேடு ஆகிய மலைப்பகுதிகளிலும் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மகரஜோதி தரிசனம் முடிந்ததும் சபரிமலை நடை ஜனவரி 20ஆம் தேதி வரை திறந்திருக்கும். பக்தர்கள் 19ஆம் தேதி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். ஜனவரி 20ஆம் தேதி பந்தள அரண்மனை குடும்பத்தினரின் ஆச்சார சடங்குகளுக்குப் பின் நடை அடைக்கப்பட்டு, சபரிமலையின் சாவி, மகாராஜா குடும்பத்தின் மூத்த உறுப்பினரிடம் ஒப்படைக்கப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com