“தேசிய மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது வழக்குப்பதியவும்”- உயர்நீதிமன்றம்

“தேசிய மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது வழக்குப்பதியவும்”- உயர்நீதிமன்றம்
“தேசிய மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது வழக்குப்பதியவும்”- உயர்நீதிமன்றம்

தேசிய, மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் அறிவுறுத்திய வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய, மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை காவல்துறை வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது என்றும், அதுபோன்ற குற்றங்கள் தடுக்கப்பட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

வழக்கு விசாரணையின் போது, சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் தரப்பில் அறிக்கையொன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில் ‘வாகனங்களிலும், நம்பர் ப்ளேட்களிலும் தேசிய சின்னங்களை தவறாக பயன்படுத்துவது தேசிய சின்னங்கள் பாதுகாப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் மற்றும் மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரியது என்பதால் உரிய வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அபராதம், வழக்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தவறான வண்ணங்களிலான விளக்குகளை பயனடுத்தியதாக 4,456 வழக்குகள், கருப்பு ஸ்டிக்கர்கள் தொடர்பாக 4,697 வழக்குகள், தவறான நம்பர் பிளேட் தொடர்பாக 1,55,331 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது நீதிபதி குறுக்கிட்டு, “தேசிய, மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்தபட்டதாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லையா? அதுபற்றி எதுவுமே அறிக்கையில் இல்லை” என சுட்டிக்காட்டி, “குற்றம் நடப்பதை காவல்துறையினர் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானது. வேடிக்கை பார்க்காமல், காவல்துறையினர் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அறிவுறுத்தினார். மேலும் முன்னாள் நீதிபதிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் ஆகியோரால் சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதையும் கட்டுப்படுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தினர்.

இதற்கு காவல்துறை தரப்பில் “காவலர்களிடமிருந்து இதுபோன்ற புகார்கள் வரவில்லை. அப்படி வராதபோது உயர் அதிகாரி தாமாக முன்வந்து வழக்குப்பதிய முடியாது” என விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது அரசு வழக்கறிஞர், “வங்கி மற்றும் காப்பீட்டு துறை ஊழியர்கள், மத்திய அரசின் முத்திரயை பயன்படுத்துகின்றனர். இதற்கு தடை விதிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நீதிபதி, “அதற்காகத்தான் கான்ஸ்டபிள் கண்டறிந்தால் கூட உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துகிறோம். தகுந்த உயர் அதிகாரிகளிடம் அவர்கள் தெரிவித்தால், உடனடியாக வழக்குப்பதியப்பட வேண்டும். கிரிமினல்களும் இதுபோன்ற சின்னங்களை பயன்படுத்தி நடவடிக்கையிலிருந்து தப்பிக்கின்றனர். அதுவும் தடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார். தொடர்ந்து, “மேலும் நாட்டில் உள்ள அனைவரும் சமமாக பார்க்கப்படுகிறார்கள் என்பதை பொதுமக்கள் எதிர்பாகின்றனர். ஆகவே அரசு, நீதித்துறை, காவல்துறை, வங்கி, காப்பீடு ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் தங்களின் தனியார் வாகனங்களில் அரசு சின்னங்களை பயன்படுத்தினால் அவர்கள் நடவடிக்கைக்கு உள்ளாக்க வேண்டு” என காவல்துறைக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இதையடுத்து இந்த வழக்கின் உத்தரவு நாளை மறுதினம் (ஜனவரி 5) தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com