மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில், மாணவர் ஒருவரை தனது உடலுக்கு மசாஜ் செய்யும்படி ஆசிரியர் வேலை வாங்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
மத்தியப் பிரதேச மாநிலம் தமோ என்ற கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில், அப்பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் தனது உடலுக்கு மசாஜ் செய்யும்படி மாணவரை வற்புறுத்தி வேலை வாங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள காணொளி காட்சியில், வகுப்பறை ஒன்றில் உறங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர் ஒருவரின் முதுகில் மாணவன் ஏறி மசாஜ் செய்யும் காட்சிகள் தெளிவாக இடம் பெற்றுள்ளன.
இதைத்தொடர்ந்து அந்த ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து மத்தியப் பிரதேச தொழில் கல்வித்துறை அமைச்சர் தீபக் ஜோஷி தனது ட்விட்டர் பக்கத்தில், வீடியோ காட்சியில் இடம்பெற்றுள்ள ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆசிரியருக்கு பள்ளி மாணவன் மசாஜ் செய்யும் இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.