மத்தியப் பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்நிலையில் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் பதவி விலகும் பட்சத்தில் மத்தியப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகும்.
மத்தியப் பிரதேசத்தில் தற்போதைய நிலவரப்படி மொத்தம் உள்ள 230 இடங்களில் இரண்டு இடங்கள் காலியாக உள்ளன. அதனால் பெரும்பான்மைக்கு 115 எம்எல்ஏக்கள் தேவை. காங்கிரசில் 114 எம்எல்ஏக்களும், பாஜகவில் 107 சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். மற்ற கட்சிகளை சேர்ந்த 7 பேர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து வருவதால், தற்போது 121 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் கமல்நாத் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் 17 பேர் பதவி விலகும் பட்சத்தில், காலியாக உள்ள இடங்கள் 19 ஆக அதிகரிக்கும். எனவே, மொத்தம் உள்ள 211 இடங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க 106 எம்எல்ஏக்கள் இருந்தால் போதுமானது.
ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 17 பேர் பதவி விலகினால் காங்கிரசின் பலம் 97 ஆக குறையும். மற்ற கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தாலும் கூட காங்கிரசின் எண்ணிக்கை 104 ஆக மட்டுமே அதிகரிக்கும். ஆனால் பாரதிய ஜனதா கட்சி ஏற்கெனவே 107 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளதால், அக்கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது.
மத்தியப் பிரதேச அமைச்சரவையில் தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் இடம் கிடைக்கவில்லை எனக்கூறி அக்கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா அதிருப்தியில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

