உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரவில்லை என்றாலும், நாங்கள் அயோதியில் ராமர் கோயிலை கட்டுவோம் என்று பாஜகவின் மூத்த தலைவர் தாபன் பெளமிக் கூறியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகளின் தலைவர்கள், சமீப காலமாக பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை கூறி வருகின்றனர். பாஜகவின் மூத்த தலைவரும், மத்தியபிரதேசத்தின் சுற்றுலா மேம்பாட்டுத்துறை தலைவருமான தாபன் பெளமிக் ராமர் கோயில் கட்டுவது குறித்து சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார். அவர், இந்துக்கள் தற்போது விழித்துக் கொண்டனர். நமக்கு சாதகமாக அயோத்தி பிரச்னையில் தீர்ப்பு வரும். அப்படி வரவில்லையென்றால், சாதகமாக தீர்ப்பு வருவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இந்துக்கள் அதை செய்வார்கள். தீர்ப்பு வந்த பிறகு, நாடாளுமன்றத்தில் உள்ள நமது கட்சியினர், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக சட்டங்களை உருவாக்குவார்கள். அப்படி அவர்கள் செய்யவில்லை என்றால், கோடிக்கணக்கான இந்துக்கள் அதை செய்ய வைப்பார்கள் என்று கூறினார்.
மேலும், மறைந்த விஹெச்பி தலைவர் அஷோக் சின்ஹால், 3 இடங்களை கொடுங்கள் அல்லது நாங்கள் 3000 இடங்களை எடுத்துக் கொள்ள வேண்டி வரும் என்று அயோத்தி குறித்து பேசியதையும், தாபம் நினைவுபடுத்தினார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் கேகே.மிஷ்ரா கூறும்போது, தாபன் பெளமிக் தனது பேச்சுக்களால் உச்ச நீதிமன்றத்தை மிரட்டுகிறார். சட்ட ரீதியான பிரச்னைகளில் அரசு தலையிடுகிறது என்பதை தாபனின் பேச்சு உறுதி செய்கிறது. தாபன் கூறியது அவரது சொந்த கருத்தாக இருந்தால், அவரை நீக்க மத்திய அரசும், பாஜகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.