பள்ளி கட்டடம் இல்லாததால் கழிவறையில் பாடம் நடத்தும் அவலம்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் தொடக்க பள்ளி ஒன்றில் மாணவ, மாணவிகளுக்கு கழிவறையில் பாடம் நடத்தும் அவலம் அரங்கேறியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் முச் மாவட்டத்தில் உள்ள மோகாம்புரா என்ற கிராமத்தில் கடந்த 2012-ல் இருந்து தொடக்க பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 34 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி ஒரு வருடம் வாடகை கட்டடத்தில் இயங்கியது. அதன் பின் வாடகை கட்டடம் கிடைக்காததால், கழிவறையில் வைத்து பாடம் நடத்தப்படுவது போன்ற புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பள்ளி ஆசிரியர் கைலாஷ் சந்திரா கூறுகையில், பள்ளிக்கு சொந்தமான கட்டிடம் இல்லாததால் மரத்தடியில் வைத்து வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இப்போது மழைக்காலம் என்பதால் மரத்தடியில் பாடம் நடத்த முடியவில்லை. எனவே கழிவறையில் வைத்து பாடம் நடத்தப்படுவதாக தெரிவித்தார். உயர் அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.