பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரில் முக்கிய சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஹர்தீப்சிங் அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தும்படி சைகை காட்டியுள்ளார். ஆனால், காரில் இருந்த நபர் காரை வேகமாக இயக்கி அந்த இடத்தில் இருந்து தப்பிக்க முயன்றார்.
அப்போது, ஹர்தீப் சிங் மீது கார் மோதியதில் அவர் காரின் பேனட் மீது விழுந்தார். கடும் நெரிசல் காரணமாக வேகம் குறைந்ததால் காரில் இருந்த விழுந்த ஹர்தீப் சிங், மீட்கப்பட்டார்.
காரில் இருந்த 2 நபர்கள் குற்றப் பின்னணி உள்ள ரவுடிகள் என்றும், விரைவில் இருவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் காரில் சட்டவிரோதமாக ஏதாவது கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் எனவும் தப்பியோடிய இருவரையும் வலைவீசி தேடி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
அடையாளம் தெரியாத அந்த இருவர் மீது பஞ்சாப் போலீசார் 307 (கொலை முயற்சி), 353 (அரசு ஊழியரை தனது கடமையைச் செய்யவிடாமல் தடுத்து தாக்குதல்), 332 (அரசு ஊழியரைத் தன் கடமையிலிருந்து தடுக்கத் தானாக முன்வந்து காயப்படுத்துதல்) மற்றும் 279 (அதிவேகமாக வாகனம் ஓட்டுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.