சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பான 4 துணை மசோதாக்களும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.
நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பினை கொண்டுவரும் நோக்கிலான ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையினை ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது. அதன்படி, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய சரக்கு -சேவை வரி மசோதா (சி-ஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த சரக்கு - சேவை வரி மசோதா (ஐஜிஎஸ்டி), யூனியன் பிரதேச சரக்கு- சேவை வரி மசோதா (யூஜிஎஸ்டி), ஜிஎஸ்டியால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்யும் மசோதா ஆகிய 4 துணை மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த 5 திருத்தங்கள் ஏற்கப்பட்டு மக்களவையில் ஜிஎஸ்டி துணை மசோதாக்கள் நிறைவேறின. அப்போது பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இந்த மசோதாக்கள் நிதிமசோதாக்களுக்கு மேலானது. அதனால், ஒருமித்த கருத்துடன் அவையில் மசோதாக்கள் நிறைவேறும் என்று நம்புவதாகத் தெரிவித்தார். ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமலானால், மாநில அளவில் விதிக்கப்படும் பல்வேறு வரி விதிப்பு முறைகள் நீங்கும் என்பதால், பொருட்களின் விலை சற்று குறைய வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார். மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, ஜிஎஸ்டி மசோதா ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் தாக்கல் செய்யப்பட்டபோது பாஜக எதிர்ப்புத் தெரிவித்தது. பாஜகவில் அந்த எதிர்ப்பால் அரசுக்கு ரூ.12 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகக் குற்றம்சாட்டினார்.