\
எடியூரப்பாவின் விதி நாளை தெரியும்: வழக்கறிஞர் பேட்டி

எடியூரப்பாவின் விதி நாளை தெரியும்: வழக்கறிஞர் பேட்டி

எடியூரப்பாவின் விதி நாளை தெரியும்: வழக்கறிஞர் பேட்டி
Published on

எடியூரப்பா பதவியில் நீடிப்பாரா இல்லையா? அவரது விதி என்ன? என்பது நாளைக்கே தெரிந்துவிடும் என காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஆட்சி அமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன. இந்த மனு, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண், எஸ்ஏ போப்தே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பில், நள்ளிரவு 2 மணி முதல் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

இறுதியாக, கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பொறுப்பேற்பதற்கு நீதிபதிகள் தடைவிதிக்க மறுத்துவிட்டனர். அதேவேளையில், கடந்த 15-ஆம் தேதி ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடிதத்தின் நகலை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதேபோல், மே 16-ம் தேதி ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து எடியூரப்பாவிற்கு ஆளுநர் எழுதிய கடிதத்தையும் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட விசாரணை நாளை காலை 10:30 மணிக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள வழக்கறிஞர், “நாளை 10.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஆட்சி அமைக்க உரிமைகோரி 15-ஆம் தேதி எடியூரப்பா வழங்கிய கடிதத்தை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 15 நாட்கள் எல்லாம் அவகாசம் இல்லை. அவர் பதவியில் நீடிப்பாரா இல்லையா என்பது ஒருநாளில் தெரிந்துவிடும். அந்த கடிதத்தை தாக்கல் செய்தாலே போதும், எடியூரப்பாவின் நிலை தெரிந்துவிடும்.”என தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com