அசாமில் தவறுதலாக பள்ளியில் புகுந்த சிறுத்தை ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த சிறுத்தை வீடியோ சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்திருக்கிறது.
அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே திரேன்பரா பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சிறுத்தை ஒன்று புகுந்துவிட்டது. அதனை பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கிய நான்கு பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. ஆனாலும் சிறுத்தையை வெளியேற விடாமல் பள்ளி அறையிலேயே போட்டு பொதுமக்கள் பூட்டி வைத்தனர்.
சிறுத்தை பள்ளி வளாகத்தில் புகுந்த செய்தி ஊரில் பரவ மக்கள் குவியத் தொடங்கி விட்டனர். பெரும் கூட்டத்தை பார்த்து அரண்ட சிறுத்தை பூட்டி வைத்த அறையின் ஜன்னல் கம்பிகளை கடித்து கோபத்தை வெளிப்படுத்தியது. பிறகு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையை பாதுக்காப்பாக பிடித்து கொண்டு போய் அசாம் மாநில விலங்குகள் உயிரியல் பூங்காவில் அடைத்தனர். இதற்கான வீடியோ தற்சமயம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.