நொடிப்பொழுதில் வேறிடம் மாறக்கூடியவர்.. இந்தியாவிலிருந்து தப்பிய பயங்கரவாதி.. யார் இந்த 'கார்கோஷ்'?
லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதியான உமர் ஹாரிஸ், போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி நாட்டைவிட்டு சவூதி அரேபியா சென்றுள்ளார். அவரை நாடு கடத்தும் பணியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. தவிர, அவரைப் பற்றிய விசாரணையையும் முடக்கிவிட்டுள்ளது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு (மே 2025), இந்தியா தனது எல்லைப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தி வரும் நோக்கில், பயங்கரவாதத்திற்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் நபர்களைத் தேடிப்பிடித்து கைது செய்து வருகிறது. இந்த நிலையில், லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதியான உமர் ஹாரிஸ், போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
மாநிலங்களுக்கு இடையேயான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதக் குழு குறித்த விசாரணையை முன்னின்று நடத்தி வரும் ஸ்ரீநகர் காவல்துறை, இதுபோன்ற முறைகேடுகளை அனுமதிக்கும் அமைப்புரீதியான குறைபாடுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். மேலும், இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) கையாள வாய்ப்புள்ள நிலையில், அவசர நடவடிக்கையை எளிதாக்கவும், குறைகளை நிவர்த்தி செய்யவும் சம்பந்தப்பட்ட மாநில காவல் படைகளுடன் விவரங்கள் பகிரப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவைச் சேர்ந்த உமர் ஹாரிஸ், முன்பு கராச்சியைச் சேர்ந்தவர் எனக் கூறப்பட்டது. கராச்சியில் அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. அதில் தீவைப்புச் சம்பவங்களும் அடக்கம். இந்த வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக அவர், லஷ்கர்-இ-தொய்பாவில் சேர்ந்ததாகவும், பின்னர், 2012ஆம் ஆண்டு அந்த அமைப்பின் மூலம் ஜம்மு காஷ்மீருக்குள் தள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஹாரிஸ், நொடிப்பொழுதில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குத் தாவக்கூடியவரர் என்பதால், 'கார்கோஷ்' (முயல்) என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
ஜம்முவில் ஊடுவிய அவர், பண்டிபோரா மற்றும் ஸ்ரீநகர் உள்ளிட பகுதிகளில் தங்கியுள்ளார். லஷ்கர்-இ-தொய்பாவின் தரைவழிப் பணியாளர் (OGW) ஒருவரின் மகளைத் திருமணம் செய்துகொண்ட அவர், அந்த நிக்காஹ் சடங்கை ஜெய்ப்பூரில், சஜ்ஜாத் என்ற பெயரில் நடத்தியுள்ளார். அவரது பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு இந்த திருமண ஆவணங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. பின்னர், அவர் இந்தோனேசியாவுக்குத் தப்பிச் சென்றதாகவும், அங்கிருந்து மற்றொரு போலியான ஆவணத்தைப் பயன்படுத்தி சவூதி அரேபியாவுக்குச் சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது அவரை நாடு கடத்தும் முயற்சியில் இந்தியா தீவிரமாய் இறங்கியுள்ளது. சமீபத்தில், பாகிஸ்தானிய பயங்கரவாதியான அப்துல்லா என்ற அபு ஹுரைரா உட்பட ஐந்து பேரைக் கைது செய்ததைத் தொடர்ந்து இந்த விவரங்கள் வெளிவந்துள்ளன.

