வயநாட்டில் நிலச்சரிவு: 40 பேரை காணவில்லை, 3 பேர் மீட்பு
கேரளாவில் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதை அடுத்து வயநாட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 40 பேர் வரை நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கேரள மாநிலம் முழுவதும் கடந்த சில நாள்களாக இடைவெளியின்றி பெய்யும் மழையால், தாழ்வான பகுதிகள் வெள்ளத் தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. தேயிலைத் தோட்டங்கள் வழியே காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வயநாட்டில் மேப்பாடி, புதுமலை பகுதிகளில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தொழிலாளர்களின் குடியிருப்புகள், கோயில், மசூதி ஆகியவை அடித்து செல்லப் பட்டன. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கிய 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சுமார் 40 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. கல்பேட்டா பகுதியில் ஒரு வீடு இடிந்து விழும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர் மழையால், மின் வினியோகம், போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் தடைபட்டுள்ளன. மக்களின் இயல்வு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது.
இதனிடையே, பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக, இயல்பை விட 6 அடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. ஆறுகளின் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு, பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.