லடாக் வன்முறை.. சோனம் வாங்சுக் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்.. மனைவி கீதாஞ்சலி பேட்டி!
தனது கணவர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரைச் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை என்றும் சமூகச் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக பேட்டிளித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த லடாக், தற்போது சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனால், ஜம்மு - காஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் சுயாட்சி வழங்கும் 6ஆவது அட்டவணை அந்தஸ்து வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்டோர் அவ்வப்போது உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் அவர் உண்ணாவிரதம் இருந்தபோது லடாக்கில் வன்முறை வெடித்தது. அப்போது போராட்டக்காரர்கள் பாஜக அலுவலகத்துக்கு தீ வைத்ததுடன், வாகனங்களையும் கொளுத்தினர். இதனால் அவர் போராட்டத்தை வாபஸ் பெற்றார். ஆயினும் இப்போராட்டத்தின்போது 4 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர்.
இதற்கிடையே, போராட்டம் மற்றும் அதன் நீட்சியாக ஏற்பட்ட கலவரத்துக்கு சோனம் வாங்சுக்கின் அமைப்பே காரணம் என்று உள்துறை அமைச்சகம் குற்றச்சாட்டி, அவருடைய வெளிநாட்டு நிதி பெறும் பதிவை ரத்து செய்தது. தவிர, வன்முறை குற்றச்சாட்டு தொடர்பாக, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டார். அவரிடம் லடாக் காவல் துறையினரும் மத்திய உளவுத் துறையினரும் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனது கணவர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரைச் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை என்றும் சமூகச் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக பேட்டிளித்துள்ளார். இதுகுறித்து அவர், “தன் கணவர் அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் செயல்படக் கூடியவர் இல்லை, மக்களின் பிரச்னைக்காவே குரல் கொடுப்பவர். மக்களுக்காகப் போராடிய அவர் மீது பணப் பரிவர்த்தனை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது” எனத் தெரிவித்துள்ளார்.