சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி.. அறிக்கை தர உத்தரவு!
ஜோத்பூர் சிறையிலுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், கடுமையான வயிற்று வலி காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் அரசமைப்பின் 6ஆவது அட்டவணை பாதுகாப்பை வலியுறுத்தி, டெல்லியை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டபோது 2025, செப்டம்பர் 27 அன்று கைது செய்யப்பட்ட சோனம் வாங்சுக் தொடர்ச்சியாக சிறையில் இருக்கிறார். இந்த நிலையில், ஜோத்பூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும் விஞ்ஞானியுமான சோனம் வாங்சுக், கடுமையான வயிற்று வலி காரணமாக ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறையில் அவரது உடல்நிலை தொடர்ந்து நலிவடைந்து வருவது குறித்துப் பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்து வருகின்றனர். அதிகாலை சிறையிலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்குள்ள இரைப்பை குடல் பிரிவில் ஒன்றரை மணி நேரம் தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
சிறையில் வழங்கப்படும் நீரின் தரம் மோசமாக இருப்பதால் அவருக்குத் தொடர்ந்து வயிற்று வலி ஏற்படுவதாக அவரது வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். கடந்த நான்கு மாதங்களில் அவர் 21 முறை சிறை மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டிருந்தாலும், வலி குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சோனம் வாங்சுக்கின் மனைவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவருக்குத் தகுந்த நிபுணத்துவ மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று காவல்துறை மற்றும் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. சோனம் வாங்சுக்கின் விரிவான மருத்துவ அறிக்கையை வரும் பிப்ரவரி 2ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

