பாலியல் புகாருக்குள்ளான கர்நாடகா பிரின்ஸ்பால் தமிழ்நாட்டிற்கு மாற்றம்: எழுந்தது சர்ச்சை

பாலியல் புகாருக்குள்ளான கர்நாடகா பிரின்ஸ்பால் தமிழ்நாட்டிற்கு மாற்றம்: எழுந்தது சர்ச்சை
பாலியல் புகாருக்குள்ளான கர்நாடகா பிரின்ஸ்பால் தமிழ்நாட்டிற்கு மாற்றம்: எழுந்தது சர்ச்சை

கர்நாடகாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் தமிழகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு பெங்களூரு கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வராக செயல்பட்டவர் குமார் தாகூர். இவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய பள்ளி மாணவிகளை குறிவைத்து அவர்களிடம் அத்துமீறி நடந்ததாகவும், ஆலோசனை என்ற பெயரில் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுமட்டுமில்லாமல் ஆசிரியர்களுக்கும் கீழ்த்தரமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் கூறப்பட்டது. அவர்கள் அதற்கு ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்தாலோ, புகார் கொடுப்பேன் என கூறினாலோ சம்பளத்தை கொடுக்க மாட்டேன் என மிரட்டியதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து பெரும்பாலான மாணவிகளின் பெற்றோர்களுக்கும், பொதுமக்களின் கோபத்திற்கும் ஆளானார் குமார் தாகூர். இதனையடுத்து இதுகுறித்து விசாரிக்க பள்ளியிலேயே ஒரு குழு அமைக்கப்பட்டது. பின்னர் விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்ட தாகூர் அதன் பின் கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். போக்சோ, ஐபிசி 353 (A) ஆகிய பிரிவுகளின் மீதும் குமார் தாகூர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் வழக்கு விசாரணை கர்நாடாக உய்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வராக பணிமயர்த்தப்பட்டுள்ளார் குமார் தாகூர். ஆகஸ்ட் 13-ஆம் தேதியில் இருந்தே பணியில் இருந்து வரும் அவரின் புகைப்படம் பள்ளி இணையதளத்தின் முகப்பு பக்கத்திலேயே இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்தார். அத்தோடு இது துறை ரீதியான முடிவு என்ற அவர், இதனை யாரெனும் பிரச்னை எனக் கருதினால் அது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்றும் கூறினார்.

குற்றச்சாட்டுகளுக்கு பின்னர் குமார் தாகூர் பணியமர்த்தப்படுவது இது முதல்முறை அல்ல. முன்னதாக கார்வார் கிளை கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டார். எனவே இதுதொடர்பாக கர்நாடக மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பிற்கான ஆணையம் கேந்திரிய வித்யாலயா ஆணையருக்கு சம்மன் அனுப்பியது. இதற்கு பதிலளித்த கேந்திரிய வித்யாலயா துணை ஆணையர், “விதிகளின் படி புகாருக்குள்ளான முதல்வர் குற்றம்சாட்டப்பட்ட இடத்திற்கு அருகாமையில் தங்க அனுமதிக்க கூடாது. சாட்சிகளுடன் அவர் தொடர்பில் இருக்கவும் கூடாது. அதனையடுத்து கார்வாரில் உள்ள பள்ளிக்கு மாற்றினோம். முதலில் அவரை விடுமுறையில் செல்ல கேட்டுக்கொண்டோம். பின்னர் அதனை திரும்பப் பெற்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தை சேர்ந்த கிர்பா ஆல்வா இதுகுறித்து கூறும்போது, “குமார் தாகூர் பணியிட மாற்றம் சட்டப்பூர்வமானதல்ல.. நீதிமன்றத்தால் விடுவிக்கப்படும் வரை அவர் எந்தப் பதவியிலும் நீடிக்கக்கூடாது. தற்போது மீண்டும் மாணவர்களுக்கு முதல்வராக வந்துள்ளார். இதன்மூலம் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதனை நாங்கள் எதிர்க்கிறோம். கேந்திரிய வித்யாலயா இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நேரடியாக நாங்கள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு கடிதம் எழுதுவோம்” என்றார்.

Courtesy: TheNewsMinute

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com