கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு சிக்கல்?: டெல்லி பயணம் திடீர் ரத்து
கர்நாடக கூட்டணி அரசில் நிலவும் உச்சபட்ச பிரச்னை காரணமாக அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி தனது டெல்லி பயணத்தை ரத்து செய்தார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றி இருந்தாலும், பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பதை தடுப்பதற்காக மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு ஆதரவு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து அக்கட்சியின் தலைவரான குமாரசாமி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். கர்நாடக காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாவும் இதற்கு சம்மதித்தார்.
அண்மையில், சித்தராமையாவே மீண்டும் முதல்வராக வேண்டும் என ஆதரவாளர்கள் எழுப்பிய குரலுக்கு அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை. இதனால், கர்நாடக அரசியலில் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கும், காங்கிரஸுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக மக்களவைத் தேர்தலில் தொகுதிகளை பங்கீட்டு கொள்வதில் ஆரம்பித்து, போட்டியிடுவது வரை இரு கட்சிகளுக்கும் இடையே பிரச்னை நீடித்தது.
மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்ற குரல் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது. இதனால், இரு கட்சிகளுக்கும் இடையிலான விரிசல் விரிவடைந்து வருவதால், குமாரசாமியின் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் அங்கு அரசியல் சூழல் மாறுவதற்கான வாய்ப்புகள் நிலவுவதால், இன்று டெல்லி செல்லவிருந்த பயணத்தை முதலமைச்சர் குமாரசாமி திடீரென ரத்துச் செய்தார். இதற்கிடையே, குமாரசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரசின் வேணுகோபாலை பெங்களூருக்கு விரையும்படி கட்சித் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.

