காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, பல இடங்களில் வேறு பொருள்படும்படி மொழிபெயர்த்தது விமர்சனத்திற்கு வித்திட்டுள்ளது.
நாகர்கோவில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் நேற்று பேசிய ராகுல் காந்தி, காஷ்மீர் மக்களுக்கான காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி தனது நண்பரான அனில் அம்பானியிடம் ஒப்படைத்ததாக கூறினார். அதை மொழிபெயர்த்த தங்கபாலு, ஜம்மு காஷ்மீரையே அனில் அம்பானியிடம் மோடி தந்து விட்டதாகக் கூறினார்.
ரஃபேல் ஒப்பந்தம் பற்றி பேசிய ராகுல், அனில் அம்பானி ஒருபோதும் போர் விமானத்தை தயாரித்ததில்லை என்றார். அதை மொழிபெயர்த்த தங்கபாலு, அனில் அம்பானி ஒருபோதும் உண்மையே பேசியதில்லை என்றார். ரஃபேல் விமானத்தின் விலை 526 கோடி ரூபாயில் இருந்து, பாரதிய ஜனதா அரசில் 1,600 கோடியாக உயர்ந்து விட்டதாக ராகுல் பேசினார். மொழிபெயர்த்த தங்கபாலுவோ, அதை 1,526 கோடி என்றார்.
திருவள்ளுவர் உண்மை வெல்லும் என்று கூறியிருப்பதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடி பொய் பேசுவதால் அவரால் வெல்ல முடியாது என்றார். தங்கபாலுவோ நரேந்திர மோடி என்பதை தவறாக உச்சரித்து, உண்மை மோடிக்கு பலிக்கவில்லை என்று மொழிபெயர்த்தார். மேலும் பல இடங்களில் ராகுலின் பேச்சுக்கு தங்கபாலுவின் மொழிபெயர்ப்பு பொருந்தவில்லை என்று பலர் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேச்சை தங்கபாலு நன்றாகவே மொழி பெயர்த்தார் என தமிழக காங்கிஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆங்கிலப் பேச்சை அப்படியே மொழி பெயர்க்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறினார்.