ஹால்டிக்கெட்டை மறந்து வந்த மாணவி - தக்கத் தருணத்தில் உதவிய காவலர்
இந்தி தேர்வுக்கு ஹால்டிக்கெட்டை கொண்டு வர மறந்த மாணவிக்கு உதவி செய்து தேர்வு எழுத வைத்த கொல்கத்தா மாநகர் காவல் அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கொல்கத்தாவை சேர்ந்தவர் குர்ரே. இவருக்கு ஜைஸ்வால் பிந்த்யாமந்திர் பெண்கள் பள்ளியில் நேற்று மதியம் 12 மணிக்கு இந்தி மத்தியமார் தேர்வு நடைபெற இருந்தது. தேர்வு தொடங்குவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு பள்ளிக்கு வந்தார் குர்ரே. ஆனால் அவரைத் தேர்வு எழுத கண்காணிப்பாளர் அனுமதிக்கவில்லை. குர்ரே ஹால்டிக்கெட்டை எடுத்து வராததால் அவரைத் தேர்வு எழுத கண்காணிப்பாளர் அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த குர்ரே தேர்வு எழுதும் மையத்திலேயே அழுதுள்ளார், தான் ஹால்டிக்கெட்டை கொண்டு வர மறந்துவிட்டதாகவும், தன்னை தேர்வு எழுதி அனுமதிக்குமாறும் தேர்வு கண்காணிப்பாளரிடம் கேட்டுள்ளார்.
இது குறித்து உல்டாதங்கா போக்குவரத்து காவலர் மாலிக்குக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக பள்ளிக்கு சென்ற மாலிக், தான் தேர்வு எழுத நிச்சயம் உதவுவதாக தெரிவித்து குர்ரேவை சமாதானம் செய்தார். பின்பு தேர்வு கண்காணிப்பாளரிடம் தேர்வு அறைக்குள் அனுமதிக்கவில்லை என்றாலும் பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனையடுத்து உடனடியாக குர்ரேவின் வீட்டுக்கு தொலைப்பேசியில் அழைத்த மாலிக், குர்ரேவின் ஹால்டிக்கெட்டை எடுத்து வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மாணவி குர்ரேவின் வீடு தேர்வு மையத்தில் இருந்து 5.5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. உடனடியாக விரைந்த மாலிக் 10 நிமிடத்துக்குள் குர்ரே வீட்டுக்கு சென்று ஹால்டிக்கெட்டை கொண்டு வந்த மாணவியிடம் ஒப்படைத்தார். பின்பு மாணவி தேர்வு எழுதி அனுமதியளிக்கப்பட்டது. இதேபோல மற்றும் ஒரு சம்வத்தில் காவலர் பி.கே.பிரம்மச்சாரி 4 கிலோமீட்டர் சென்று மற்றொரு பெண்ணுக்கு ஹால் டிக்கெட் கொண்டு வந்து உதவியுள்ளார். நேற்று மட்டும் கொல்கத்தாவில் இதுபோன்று 5 சம்பவங்களில் காவலர்கள் மாணவர்களுக்கு உதவியுள்ளனர்.