கோடநாடு கொலை, கொள்ளை: சிபிஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஆம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாயின. இதையடுத்து ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உட்பட 5 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் பலியாயினர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான், மனோஜ் ஆகியோர் கடந்த 11ஆம் தேதி டெல்லியில் பேட்டி அளித்தனர். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது அவர்கள் புகார் கூறினர். கோடநாடு கொலை- கொள்ளை தொடர்பான ஆவண படத்தையும் வெளியிட்டனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார். இதற்கிடையே, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் வழக்கறிஞர் ஜி.எஸ். மணி கோடநாடு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். ஆனால்சிபிஐ விசாரணை கோரிய டிராபிக் ராமசாமியின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.