சண்டையிட்டுக் கொண்ட யானைகள்.. பெண்ணைத் தொடர்ந்து யானையும் பலி.. அதிரவைக்கும் வீடியோ காட்சிகள்!
கர்நாடக மாநிலத்தில் குடகு அருகே துபாரே யானைகள் முகாம் அமைந்துள்ளது. காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த முகாமில், காலை 8.30 மணி முதல் 11 மணிவரை யானைகள் குளிப்பதற்காக அழைத்துவரப்படும். அப்போது சுற்றுலாப் பயணிகள் யானைகளுக்கு அருகில் சென்று உணவு அளிக்க அனுமதி வழங்கப்படும். இதனால் இந்த இடம் அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வந்தது. அந்த வகையில், நேற்று வழக்கம்போல முகாமில் உள்ள யானைகள் காவிரியில் குளித்துக் கொண்டிருந்தபோது, அதன் அருகில் சுற்றுலாப் பயணிகளும் நின்றுகொண்டிருந்தனர்.
அப்போது திடீரென இரண்டு யானைகள் ஒன்றோடு ஒன்று தாக்கிக்கொண்டன. இந்தச் சண்டையை பாகன்களால் தடுத்து நிறுத்த முடியாத நிலையில், அதில் ஒரு யானை அந்தப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர் மீது விழுந்தது. தவறி விழுந்த பெண்ணை காப்பாற்ற அந்தப் பெண்ணின் கணவர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், யானையின் அடியில் நசுங்கி அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்தப் பெண் சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த 33 வயதான ஜின்னு என்பது தெரியவந்தது.
இந்நிலையில் சண்டையிட்டுக்கொண்ட இரு யானைகளில் ஜெய் மார்த்தாண்டா என்ற பெயருடைய ஒரு யானைக்குத் தீவிர காயங்கள் ஏற்பட்டன. இந்நிலையில், அந்த யானை இன்று பரிதாபமாக உயிரிழந்தது. நேற்று நடைபெற்ற அந்த மோதலுக்குப் பிறகு, ஜெய் மார்த்தாண்டா யானைக்கு ஆறு இடங்களில் ஆழமான காயங்கள் ஏற்பட்டன.
அந்த யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில்,யானையின் உடல்நிலை இரவு முழுவதும் கவலைக்கிடமாகவே இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஜெய் மார்த்தாண்டா யானை இன்று உயிரிழந்தது.

