கிரண்பேடியுடன் முதல்வர் நாராயணசாமி பேச்சுவார்த்தை
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
புதுச்சேரியில் அரசு நிர்வாகத்திற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுவதாகக் கூறி ஆளுநர் மாளிகை அருகே முதலமைச்சர் நாராயணசாமி கருப்பு சட்டை அணிந்து கடந்த 13-ஆம் தேதி தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அதேசமயம் நாராயணசாமி போராட்டத்தை தொடங்கிய மறுநாள் துணைநிலை, ஆளுநரான கிரண்பேடி புதுச்சேரியிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
ஆனால் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தர்ணா போராட்டம் தொடரும் எனக் கூறி, தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் தர்ணா போராட்டத்தை நடத்தி வருகிறார் நாராயணசாமி. அவருடன் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இதனிடையே நேற்று புதுச்சேரி வந்த ஆளுநர் கிரண்பேடி பேச்சுவார்த்தைக்காக முதலமைச்சர் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார். அதனால் பேச்சுவார்த்தையில் இழுப்பறி நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு மக்கள் நலன் கருதி ஆளுநர் கிரண்பேடியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது ஆளுநர் கிரண்பேடியுடன் முதலமைச்சர் நாராயணசாமி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். பேச்சுவார்த்தையின் போது அரசு அதிகாரிகள் உடன் உள்ளனர்.