திரைப்பட காட்சியை உண்மை சம்பவமாக நினைத்து பதிவிட்ட கிரண் பேடி! இது முதன்முறை அல்ல...

திரைப்பட காட்சியை உண்மை சம்பவமாக நினைத்து பதிவிட்ட கிரண் பேடி! இது முதன்முறை அல்ல...
திரைப்பட காட்சியை உண்மை சம்பவமாக நினைத்து பதிவிட்ட கிரண் பேடி! இது முதன்முறை அல்ல...

ஹாலிவுட் திரைப்பட காட்சியை உண்மை சம்பவமாக நினைத்து, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி அதனை ட்விட்டரில் பதிவிட்டதுதான் தற்போது டிரெண்டிங் ஆகி வருகிறது.

இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையை பெற்றவர் கிரண் பேடி. ஐபிஎஸ் பணியில் இருந்து ஓய்வு பெற்ற அவர், 2015-ம் காலக்கட்டத்தில் பாஜகவில் இணைந்தார். பின்னர் புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் அவர் பதவி வகித்தார். தற்போது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் கிரண்பேடி, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார். சில நேரங்களில் அரசியல் ரீதியிலான கருத்துகளையும் அவர் ட்விட்டரில் பதிவிடுவது வழக்கம். அதே சமயத்தில், அரசியல் தவிர பல சுவாரசியமான வீடியோக்களையும் அவர் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

இதனிடையே, அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் உலா வரும் போலி வீடியோக்களை, உண்மை என நினைத்து அவற்றை ட்விட்டரில் ஷேர் செய்து நெட்டீசன்களின் விமர்சனத்துக்கு அவர் உள்ளாகி வருகிறார்.

அந்த வகையில், கிரண்பேடி நேற்று ஒரு வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். அதில், வானில் பறந்து வரும் ஹெலிகாப்டரை சுறா மீன் ஒன்று கடலில் இருந்து தாவிச் சென்று பிடித்து கடலுக்குள் இழுத்து செல்வதை போன்ற காட்சி இருக்கிறது. அதற்கு கீழே, 'இந்த அரிய வீடியோவுக்கு நேஷ்னல் ஜியோகிரஃபி சேனல் 1 மில்லியன் டாலரை கொடுத்திருக்கிறது' என எழுதப்பட்டுள்ளது.

இந்த வீடியோவானது 2017-இல் வெளியான 'ஃபைவ் ஹெட்டட் ஷார்க் அட்டாக்' என்ற திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியாகும். ஆனால், இதனை உண்மையான வீடியோ என நினைத்து கிரண்பேடி ஷேர் செய்துள்ளார்இதை பார்த்த நெட்டீசன்கள், கிரண்பேடியை வறுத்தெடுத்து வருகின்றனர். "சாதாரண பள்ளி மாணவனுக்கு கூட இது போலியான வீடியோ என தெரியும். ஆனால் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவருக்கு இது கூட தெரியவில்லையா.." என பலரும் கமெண்ட் செய்துள்ளனர். "போலியான வீடியோ என தெரியாவிட்டாலும் பரவாயில்லை. ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் ஒரு விஷயத்தை பகிரும் முன்பு அது நம்பகத்தன்மை வாய்ந்ததா என்று கூடவா சோதித்து பார்க்க மாட்டார்" எனவும் பலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.

முதன்முறை அல்ல...

கிரண்பேடி இவ்வாறு போலியான வீடியோக்களை உண்மை என எண்ணி, ட்விட்டரில் ஷேர் செய்வது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்பு, அண்டவெளியில் சூரியனில் இருந்து ஓம் என்ற ஓசை ஒலிப்பதாக கூறி ஒரு போலி வீடியோ வெளியானது. இதையும் உண்மை என எண்ணி கிரண்பேடி ட்விட்டரில் பதிவிட்டது பெரும் விமர்சனங்களுக்கு வித்திட்டது.

அதேபோல, கடந்த 2017-ம் ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று ஒரு வயதான மூதாட்டி தனது வீட்டில் நடனமாடுவது போல ஒரு வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் சிலர், அந்த மூதாட்டியை நரேந்திர மோடியின் தாயார் என கிண்டலுக்காக குறிப்பிட்டிருந்தனர். இதையும் உண்மை என நம்பி, கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து நெட்டீசன்களின் விமர்சனங்களை வாரி சுருட்டிக் கொண்டார்.

மேலும், அதே ஆண்டு ஜனவரி மாதம் 26-தேதி குடியரசு தினத்தன்று உலகில் உள்ள பல புராதன சின்னங்கள் இந்திய தேசியக் கொடியின் வண்ணத்தில் மிளிர்வது போல ஒரு புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்டது வெளியிடப்பட்டது. அதையும் ட்விட்டரில் பகிரிந்திருந்த கிரண் பேடி, அதற்கு கீழே, "அருமை.., ஜெய்ஹிந்த்" என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com