சினிமாவை மிஞ்சிய சேஸிங் சீன்: கார் திருடனை துரத்திப்பிடித்த கேரள நபர் - வீடியோ.!

சினிமாவை மிஞ்சிய சேஸிங் சீன்: கார் திருடனை துரத்திப்பிடித்த கேரள நபர் - வீடியோ.!
சினிமாவை மிஞ்சிய சேஸிங் சீன்: கார் திருடனை துரத்திப்பிடித்த கேரள நபர் - வீடியோ.!

கேரள மாநிலம் வயநாடைச் சேர்ந்தவர் எலியாஸ். செப்டம்பர் 29ஆம் தேதி, அவர் தனது வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது மீனாங்கடி காவல் நிலையத்திலிருந்து அவருக்கு ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அதில், கோழிக்கோடு - மைசூரு ஹைவேயில் அவருடைய கார் அதிக வேகத்தில் சென்றதற்காக அபராதம் கட்டவேண்டும் என போலீஸார் கூறியிருக்கின்றனர். அவர்கள் கூறிய இன்னோவா காரை சர்வீஸிற்கு விட்டிருப்பதால், அதை ஓட்டியவரிடம் இருந்து அபராதத் தொகையைப் பெற்றுக் கொள்ளுமாறு கூலாக கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்திருக்கிறார் எலியாஸ்.

பிறகுதான் அவருக்கு தெரிந்திருக்கிறது சர்வீஸ் சென்டரிலிருந்து தனது கார் திருட்டுப்போன விஷயம். சர்வீஸ் செண்டரிலிருந்து மதியம் 12:40க்கு யாரோ காரை ஓட்டிச்சென்றது அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருக்கிறது.

அதிகவேகத்தில் சென்றதாக கிருஷ்ணகிரி பகுதியில் போலீஸாரால் கார் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அங்கிருந்து தப்பித்தபோது, போலீஸார் வானகத்தின் விவரங்களைக் கண்டறிந்து எலியாஸிற்கு அழைத்திருக்கின்றனர்.

வயநாட்டிலிருந்து கர்நாடகா, கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை வழிகள் எலியாஸுக்கு தெரிந்திருந்ததால், போலீஸாரின் உதவியை எதிர்பார்க்காமல் அவரே தனது காரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

போலீஸில் வழக்குப்பதிவு செய்தபிறகு, எலியாஸும் அவருடைய மகனும், மற்றொரு காரில், இன்னோவாவை தீவிரமாக தேடியிருக்கின்றனர்.  அம்பலவயலுக்கு அருகே மட்டப்பாரா பாறை பகுதியில் அவர் செல்லும் வழிக்கு எதிர்பக்கத்தில் நெடுஞ்சாலையில் தனது சிவப்புநிற இன்னோவா கார் வேகமாக செல்வதைப் பார்த்திருக்கிறார்.

அவர் துரத்திச் செல்வதைப் பார்த்த திருடன், நெடுஞ்சாலையில் செல்லாமல் குறுக்கு வழியில் அங்கிருந்த கடைமுன்பு நின்ற பைக்குகளை அடித்து நொறுக்கிவிட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் விடாமல் துரத்திச்சென்ற எலியாஸ் 5 கிலோமீட்டருக்குள் ஒரு குறுக்குச்சந்தில் சென்ற திருடனை பிடிக்க, அவருடைய ஊழியர் ஒருவர் காரிலிருந்து இறங்கி ஓடியிருக்கிறார். அவருடன் சில உள்ளூர்வாசிகளும் ஓடிச்சென்று காரைத் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். ஆனால் அவர்களையும் மீறி அந்த திருடன் காரை திருப்பிக்கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டான். இதை அங்கிருந்த ஒருவர் படம்பிடித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டிருக்கிறார்.

முதல் முயற்சி தோல்வியில் முடிந்தாலும், எலியாஸ் விடவில்லை. அங்கிருந்து 15 கிலோமீட்டருக்கு அப்பால் மேப்பாடி பகுதிக்கு அருகில் வடுவான்சல் பகுதியில் மீண்டும் காரை கண்டுபிடித்திருக்கிறார். மேப்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கார் நுழைந்தவுடனேயே, மீனாங்கடி போலீஸார் அங்கு தகவல் கொடுத்துவிட்டனர். அதற்குள் எலியாஸும், கட்டடப் பணி நடந்துகொண்டிருக்கும் ஒரு இடத்தில், இரண்டு கார்களுக்கு நடுவே தனது சிவப்பு கார் நிற்பதை பார்த்துவிட்டார். ஆனால் காரை ஓட்டிவந்த திருடன் தப்பிச் சென்றுவிட்டான். எலியாஸ் அந்த கட்டடத்திற்கு பின்புறத்தில் இருந்த காட்டுப்பகுதியில் தேடி அங்கு ஒளிந்திருந்த திருடனை ஒருவழியாகக் கண்டுபிடித்துவிட்டார்.

அதன்பிறகு அங்குவந்த போலீஸார் திருடனை கைதுசெய்துள்ளனர். விசாரித்ததில், அந்த திருடன் பெங்களூருவைச் சேர்ந்த பிலக்கல் நாசிர் என தெரியவந்துள்ளது. ஏற்கெனவே நாசிர்பேரில், 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பெங்களூருவில் பதிவாகி இருக்கிறதாக போலீஸார் கண்டறிந்துள்ளனர். இதற்கு முன்பே கோழிக்கோடு பகுதியில், காரில் ஜிபிஎஸ் இருந்தது தெரியாமல் ஒரு காரைத் திருடிச்சென்றிருக்கிறார். ஜிபிஎஸ் உதவியுடன் போலீஸார் மீட்டிருக்கின்றனர். 

கடுமையாக சேதமடைந்த காரை உள்ளூர்வாசிகளின் உதவியுடன் சரிசெய்து அங்கிருந்து கொண்டு சென்றிருக்கிறார் எலியாஸ். துரத்திச் சென்றதில், காரின் வெளிப்பகுதி பயங்கர சேதமடைந்திருப்பதாகவும், ஏதேனும் முக்கிய பகுதிகள் மாற்றப்பட வேண்டுமா என்பதை மீண்டும் சர்வீஸ் சென்டரில் அனுப்பித்தான் கண்டுபிடிக்கவேண்டும் என எலியாஸ் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com