கேரளாவின் கோட்டயத்தில் பிரபலமான பெண்.. காரணம் கொரோனா.! ஏன் தெரியுமா?
கொரோனாவுடன் வாழப்பழகிக்கொள்ளவேண்டும் என்று கூறுவது இப்போதெல்லாம் சாதாரணமாகிவிட்டது. ஆனால், கேரள மாநிலம் கோட்டயத்தில் பத்தாண்டுகளாக கொரோனாவுடன் குடித்தனம் நடத்திவருகிறார் ஒரு நபர்.
கேரளாவில் 34 வயது பெண்ணின் பெயர்தான் கொரோனா. கோட்டயம் மள்ளுசேரி அம்புரோஸ் நகரில் வசிக்கும் ஷைன்தாமஸ் என்பவர்தான் கொரோனாவின் கணவர். ஷைன்தாமஸ், கொரோனா தம்பதிக்கு ஒன்பது மற்றும் ஏழு வயதுகளில் இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் வரை இவரது பெயரை கண்டு யாரும் ஆச்சரியமடையவில்லை. ஆனால் இப்போதோ, கோட்டயம் முழுவதும் இவர் பிரபலமாகிவிட்டார்.
கொரோனா என்றால் கிரீடம் என்று பொருள் என்பதால், இவருக்கு இப்பெயரை புனித ஜோசப் பேராலய அருட்தந்தை சூட்டியுள்ளார். கொரோனா பெருந்தொற்று அச்சம் ஏற்படுத்திவரும் நிலையில், இவரை பெயரை கேட்டு அதிர்ச்சியடைவோருக்கு ஆதாரங்களை காட்டுகிறார் கொரோனா. இப்போது இவரது வீட்டை கடந்து செல்லோரும் கொரோனா நலமா என்று கேட்டுச்செல்லும் அளவுக்கு இவர் பிரபலமடைந்துள்ளார். ஷைன்தாமஸ்தான் வீட்டுக்கு வெளியேயும், வீட்டுக்கு உள்ளேயும் கொரோனாவுக்காக அச்சப்பட வேண்டியவராக இருக்கிறார் என்று சிலர் நகைச்சுவையாகவும் குறிப்பிடுகின்றனர்.