கேரளா | போதைப் பழக்கத்தை எதிர்த்த தாயை கொடூரமாக கொலை செய்த மகன்!
கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுபைதா. 52 வயதான இவர் கணவனை இழந்தவர், கூலி வேலை செய்து தனது ஒரே மகனான ஆஷிக்கை (30) வளர்த்து வந்துள்ளார். ப்ளஸ்டூ முடித்ததும் ஆஷிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துள்ளார். கல்லூரியில் அவருக்கு போதைப்பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அடிக்கடி சுபைதாவிடம் பணம் கேட்டு பிரச்சனை செய்துள்ளார்.
கல்லூரி படிப்பை முடித்த ஆஷிக் சொந்தமாக எலட்ரிக் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஆஷிக்கின் போதை பழக்கம் அவரின் குடும்பத்தினருக்கு தெரியவரவே.. ஆஷிக்கையும் சுபைதாவையும் ஒதுக்க ஆரம்பித்துள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க... ஆஷிக் முழுநேர போதைப்பழக்கத்திற்கு ஆளாகி இருக்கிறார். அதனால், சுபைதா அவரை போதை தடுப்பு மையத்தில் இருமுறை சேர்த்தும் இருக்கிறார். ஆனால் ஒவ்வொருமுறையும் போதை தடுப்பு மையத்திலிருந்து வெளியே வந்த ஆஷிக் மீண்டும் போதைகுழுவினருடன் இணைந்து போதைக்கு அடிமையாகி இருக்கிறார். அவரால் போதையை விடமுடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக ஆஷிக் அவர் மீதே வெறுப்புக்கொள்ள ஆரம்பித்து இருக்கிறார். தான் இந்த உலகத்தில் பிறந்ததற்கு காரணம் சுபைதா, என்று நினைத்த ஆஷிக் தாயின் மீது வெறுப்புற்று அவரை இருமுறை கொல்லவும் முயன்றுள்ளார்.
இந்நிலையில் சுபைதாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் போகவே அவர் தனது சகோதரியான ஷகிலா வீட்டில் சில நாட்களாக தங்கியுள்ளார்.
சம்பவம் நடந்த அன்று ஆஷிக் போதையில் தன் தாயை கொலைசெய்ய நினைத்து அக்கம்பக்கத்தினரிடம் தேங்காய் உரிக்க கத்தி வேண்டும் என்று வாங்கிக்கொண்டு, தனது சித்திவீட்டில் தங்கியிருந்த தாயை சரமாரியாக கழுத்தில் வெட்டியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே சுபைதா பிணமானார். பின்னர் சாவகாசமாய், ரத்தம் தோய்ந்த கத்தியையும் கைகளையும் வீட்டின் முற்றத்தில் உள்ள குழாயில் கழுவுகையில், அக்கம்பக்கத்தினர் சம்பவத்தினை தெரிந்துக்கொண்டு தப்பி ஓடப்பார்த்த ஆஷிக்கை பிடித்து போலிஸில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.